ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்

பதிகங்கள்

Photo

தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்பு லனாய்அறி வார்க்கமு தாய்நிற்கும்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புலன் நாடிய கொல்லையு மாமே.

English Meaning:
The Infinite Ground of Sakti`s Descent

If you meditate on the primal source
Whence the evil senses sprang
You shall know it as Land of Becoming,
The ambrosia of the Realized;
They that have been given the clear vision nectar sweet,
Are verily the Infinite Ground
Of Sakti`s highest seeking.
Tamil Meaning:
`உண்மையில் இன்பப் பொருளாய் உள்ள சிவனை அறிந்து அவனை அடையும் வழியை நாடினால், அங்ஙனம் அறிந்து நாடுவோர்க்கு அவன் தான் ஒருவனே இன்பப் பொருளாய்த் தோன்றித் தேவாமுதம்போலத் தித்தித்து நிற்பான். அவ்வாற்றால் அதற்குமேல் அவனது உண்மை நிலையைத் தெளிந்தவர்கட்கு அவன், தனக்கு நல்ல புல்லும், நீரும், நிழலும் உள்ள இடம் யாது என நோக்கிய பசுவிற்கு அங்ஙனமே உள்ளதாய்க் கிடைத்த புனம்போல நின்று எல்லையில் இன்பத்தை அளிப்பான்.
Special Remark:
``புலன்`` என்பதனை நான்கிடத்தும் `புனல்` எனப் பாடம் ஓதுவாரும் உளர். கோ - பசு. `கோப்புலன்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது.
இதனால், இச்சத்திநிபாதம் வரப் பெற்றார்க்குச் சிவானந்த வேட்கை விளைதல் கூறப்பட்டது.