ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்

பதிகங்கள்

Photo

அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் [கொட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும்
உண்ணிற்ப வெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்ற களியது வாமே.

English Meaning:
Fruit of Grace

In the garden of the Heavenly Father
Is that Damsel of Grace;
She approaches you,
Reveals the mystery of the births beyond count,
And destroys their very seed;
And then you vision the Primal One;
That, indeed, is the fruit of Her Grace.
Tamil Meaning:
இனி, நான்கு மந்திரங்களால் மூன்றாவதாகிய சத்தி நிபாதம் உணர்த்துகின்றார்.
முன் துன்பமாய் நின்ற நிலை மாறி இப்பொழுது இன்பமாய் நிற்கின்ற சத்தி, சிவனால் கட்டிக்கொடுக்கப்பட்ட குடிலாகிய ஓர் உடம்பினுள் நின்று, `ஏழ்` என்னும் வகையுட்டானே மாறி மாறி வருகின்ற பலவாகிய பிறப்புக்களிலும் உளவாகின்ற துன்பங்களை யெல்லாம் உணரச்செய்வாள். பின் அவ்வுணர்ச்சி காரணமாக உயிரின் அகத்தே யுள்ள பல வகையான விருப்பு வெறுப்புக்களும் ஒழிந்துபோக, முதல்வனாகிய சிவனைக் கண்டு களிக்கும் களிப்புமாவாள்.
Special Remark:
அண்ணித்தல் - இனித்தல். `எண்ணுவிக்கும்` என்பது திரிபெய்தி நின்றது. ``ஏழ் ஏழ்`` ஒருசொல் அடுக்கு. அறிவு உடம்பிட மாக நிகழ்தலின், அறிவின்கண் நிற்றலை உடம்பின்கண் நிற்பதாகக் கூறினார். ``நிலவாத புலால் உடம்பே புகுந்து நின்ற - கற்பகமே``1 என்ற அப்பர் திருமொழியையும் காண்க. ``பிறவி`` என்பது, விடாத ஆகுபெயர். ``கண்ணுற்று நின்ற`` என்பது ஒருசொல் நீர்மைத்து. அப் பெயரெச்சம் `ஆறு சென்ற வெயர்` என்பதுபோல, ``களி`` என்னும் காரியப்பெயர் கொண்டது. ``உணர்விக்கும்`` ``கண்ணுற்ற நின்ற களியாகும்`` என்றதனால், தீவிர சத்திநிபாதம் ஞானத்தைத் தருதல் பெறப்பட்டது. சிவாக்கிர யோகிகளும், ``தீவிர சத்திநிபாதம் சிவஞானம் பிரகாசம்`` என்றார். `இதில் சத்தி வித்தையாய்ப் பதியும்` என்பதும் அவர் கூறுவது. இந்த ஞானம் சிவநூல்களைக் கற்றல் கேட்டல்களால் வரும் கருவி ஞானமே (அபர ஞானமே) என்க.
``ஞானநூல் தனைஓதல், ஓது வித்தல்,
நற்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா
ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை`` 1
என்பதில், முதலில் உள்ள மூன்றும் இந்த ஞானமேயாதல் அறிக.
``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்`` 2
என்று அருளிச்செய்ததும் இந்நிலையினரை நோக்கியே என்க.
இதனால், தீவிர சத்திநிபாதத்தின் இயல்பு கூறப்பட்டது.