ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்

பதிகங்கள்

Photo

பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.

English Meaning:
They That Adore Sakti Shall Be Granted Things Spiritual

She is the Damsel of the mountain regions;
Of shapely breasts and delicate beauty;
If you in devotion adore Her,
She cuts the bonds of birth asunder;
Grants the prowess of mighty tapas;
Scorches the soul`s forgetfulness;
And leads you to liberations path.
Tamil Meaning:
இமய மலையில் தோன்றி வளர்ந்த மகளும், அபர ஞான பரஞானங்களையே இருதனங்களாகக் கொண்டு உயிர்கட்கு அந்த ஞானமாகிய பாலை ஊட்டி வளர்ப்பவளும் ஆகிய சத்தி, மேற் கூறியவாறு முதல்வனைக் கண்ணுற்று நிற்கும் ஞானத்தால் வழிபடு கின்றவர்கட்குத் தவங்கள் எல்லாவற்றினும் சிறந்த தவமாகிய சிவ புண்ணியத்தை வழங்குவாள்; அதனால் பிறப்பை ஒழிப்பாள்; சிவனை மறக்கும் மறதியாகிய அஞ்ஞானத்தை நீக்குவாள்; யாவரும் அவரை வழிபடும் நிலையில் உயர்த்து வைப்பாள்.
Special Remark:
காரண காரிய முறையால் முன் நிற்கற்பாலதாய பெருந் தவம் நல்கல், செய்யுள் நோக்கிப் பின் நின்றது. குறச்சாதியாகக் கூறியது, மலைமகளாதலை நயம்படக் குறித்தவாறு. சிறப்பு, இங்கு ஞானம், ஒடு உருபு, ``வேலொடு நின்றான், கோலொடு நின்றான்`` 1 என்பவற்றிற் போலச் சிறப்பித்தற் பொருளில் வந்தது. நின்றார் - உரியராயினார்.
இதனால், தீவிர சத்திநிபாதத்தின் பயன் கூறப்பட்டது.