ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்

பதிகங்கள்

Photo

இருவி னைநேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணமல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.

English Meaning:
When Grace Descends as Guru

When Jiva attains the state of Neutrality
To deeds, good and evil,
Then does divine Grace in Guru form descend,
Removes attributes all,
Implants Jnana that is like a heavenly cool shade;
The Jiva thus rid of egoity,
And other Impurities Three,
Shall with Siva in union merge.
Tamil Meaning:
இருவகை வினைகளும் ஒரு தன்மையவாக ஒத்து நிற்குங் காலத்தில் உண்டாவதே இனிய அருட்சத்தியது பதிவு. `அஃது உண்டானபொழுது சிவன் குருமூர்த்தியாய் வந்து குற்றங்கள் யாவற்றையும் நீக்கி வழங்குவான்` எனப்படுகின்ற அந்த ஞானத்தாலே புருடன் தன் செயல் அற்று அருள் வழியில் நிற்பானாயின், மும்மலங்களும் பற்றற்று ஒழிய, அந்தச் சிவனே தானாவான்.
Special Remark:
சத்திநிபாதமாவது சிறப்புடைய இந்நான்காஞ் சத்தி நிபாதத்தின் இயல்புகளை இங்கே முற்ற எடுத்தோதினார். இரு வினைகளும் நேரொத்தலாவது அவற்றது பயன்களாகிய உலகியல் இன்பம், துன்பம் இரண்டனையும் ஒரு பெற்றியவாகவே உணர்ந்து, அவற்றில் விருப்பு வெறுப்புக்கள் இல்லாதிருக்கும் நிலையாம். இதுவே ஆணவ மலம் பரிபாகமானதற்கு அறிகுறியாகும். ஆகவே, `இருவினை யொப்பும், மலபரிபாகமும் வந்தால், சத்திநிபாதம் வரும்` என்பர். ஞானத்தைப் பரிபாகம் வருமுன் உணர்த்துதல், வந்தபின் உணர்த்தாதிருத்தல் இரண்டுமேகூடா ஆகலின், சத்தி நிபாதம் வரப்பெற்றார்க்குச் சிவன் குருவாய் வந்து ஞானத்தை உணர்த்துதல் ஒருதலையாம். இது பற்றிய செய்திகள் பலவற்றையும் சிவஞானபோத எட்டாம் சூத்திரத்திலும், அதன் உரைகளிலும் விளங்கக் காண்க. சத்தி நிபாதத்தின் வழிச் சிவன் வந்து செய்தலை அச்சத்தியே செய்வதாகக் கூறினார்.
இதனால், சத்திநிபாதத்து இயல்பெல்லாம் இதனுள் வைத்து முற்ற உணர்த்தப்பட்டது.