ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே. 

English Meaning:
Gods in Successive Adharas and Niradharas

Brahma, Vishnu and Rudra
Maheswara, Sadasiva,
Bindu, Nada, Sakti,
Para Bindu and Para Nada
In that ascending order
They all seek
Feet of the Ultimate.
Tamil Meaning:
மகேசுரனுக்குக் கீழ் அயன், மால், உருத்திரன் என்னும் மூவரும் மூலாதாரம் முதலிய மூன்று ஆதாரங்களிலும் முறையே நிற்க, மகேசுரனுக்குமேல், `விசுத்தி, ஆஞ்ஞை, நா அடி, உச்சி, தலைக்குமேல் பன்னிரண்டங்குலம்` என்னும் இடங்களில் சதாசிவன், விந்து, நாதம், பரவிந்து, பரநாதம் என்போர் முறையே நின்று பயன் தருமாறு உயிர்களுக்கு அளித்த சத்தி, `பரை` எனப்படும் சிவனது திருவருளே.
Special Remark:
இதனுள் ஒன்பது இடங்கள் குறிக்கப்பட்டமை புலனாகும். ``முன்`` எனவே, ``பின்`` என்பதும், அவ்விரண்டனாலும் `இடை` என்பதும் பெறப்பட்டன. `முன், பின்` என்பன `கீழ், மேல்` என்னும் பொருளவாய் நின்றன. கீழே உருத்திரன் ஈறாகவும், மேலே சதாசிவர் முதலாகவும் கூறினமையின் இடையே அனாகதத்தில் மகேசுரர் இருத்தல் பெறப்பட்டது. எனவே, நாயனாரது துணிபு இம்முறையே யாதல் பெறப்படும். பிற முறைகளில் சிறிது மேலே (பா. 575 உரை) காட்டப்பட்டது. அம்முறை பற்றி, நிற்பார், இங்கு, ``மூல முதல்`` என்பதற்கு, `கணபதி` எனவும், ``மூலாதாரத்திற்கு மேல்`` எனவும் பொருள் உரைப்பர். `பரவிந்து` முதலியவை செய்யுளுக்கு ஏற்ப வைக்கப்பட்டன. திருவருளை, இறைவன் பாதம் என்றல் மரபு.
இதனால், மேல், ``நாதன் இருந்த நகர்`` எனப்பட்டன இவை என்பது கூறி, இவ்வாறெல்லாம், திருவருள், யோகிகட்கு நலம் செய்தல் கூறப்பட்டது.