ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே. 

English Meaning:
Description of Sadasiva Nayaki

Five are Her awe-inspiring faces;
Ten Her weapons deadly;
Without the five-lettered mantra
No ascension is,
From the twin petalled Centre to the thousand petalled;
The Five Letters in time the One Letter become (Aum).
Tamil Meaning:
சதாசிவ மூர்த்தியின் சத்தி, பத்துக் கைகளில் பத்து ஆயுதங்களை ஏந்தி இருப்பவளாகக் கிரியாவான்கள் கருதுவர். ஆயினும், யோகத்தில் அவளை இரண்டாயிரம் கைகளில் இரண்டா யிரம் ஆயுதங்களை ஏந்தி நிற்பவளாகக் கூறலாம். அவள் மேற்கூறிய ஐந்து காலங்களிலும் தங்கி நின்று அருளுதல், உயிர் ஒன்றையேயாம்.
Special Remark:
சதாசிவமூர்த்தி, வேறுபட்ட ஐந்து நிறங்களை உடைய ஐந்து முகங்களையும், அவற்றிற்கு ஏற்ப அமைந்த பத்துக் கைகளில் பத்து ஆயுதங்களையும் உடையராயிருத்தல் பற்றி அவரது சத்தியையும் அத்தன்மையளாகவே கூறினார். எனவே, `அஞ்சுடன் அஞ்சு முகம்` என்றதில் முதலில் உள்ள ஐந்து, ஐந்து நிறங்களைக் குறிப்பதாம். மூன்றாம் அடியில் `அஞ்சுடன் அஞ்சு` என்பதனையே ``அஞ்சு`` எனச் சுருங்க ஓதினார். ``இரண்டது ஆயிரம்`` என்றது மேலைத் திருமந்திரத்தில் இரு பிராணனும் ஆயிர நாடிவழிச் செல்லுதலைக் குறித்ததாம். `அஞ்சு காலத்தும் ஒன்றையே எடுத்து உள்ளும்` என்க. உள்ளுதல் - நினைத்தல்; அருளுதல். `காலம்` என்னும் பொதுமைபற்றி, `அஞ்சது` என ஒருமையாற் கூறினார். எனவே, `அஞ்சாகிய அக்காலம்` என்பது பொருளாயிற்று. `காலத்தும்` என்பதில் அத்தும், உம்மையும் தொகுத்தல் பெற்றன. ``ஒன்று`` என்பதில், இரண்டன் உருபு இறுதிக்கண் தொக்கது.
இதனால், நாடிகள் பலவற்றையும் இயக்கி உயிரைத்தாங்கி நிற்பது திருவருளே என்பது உணர்த்தப்பட்டது.