ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே. 

English Meaning:
Poorna Sakti as the Supreme Cause Expands

Sakti that is Poorna (Perfection)
Filled Herself into Chambers Three times Seven;
The Nine lovely Virgins became a hundred and five
And as the Cause of Vishnu, Brahma
And the rest of the Gods Five
She expanded pervasive.
Tamil Meaning:
பூரண சத்தியாகிய ஆதிசத்தி, `இச்சை, ஞானம், கிரியை` என மூன்றாகி, குண்டலியில், `அகாரம், உகாரம், மகாரம், அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதம்` என்னும் ஏழு கலை களிலும் பொருந்தி இருபத்தொரு கூறாதலால், அவ் விருபத்தொரு கூறும் பிரமன் முதலிய ஐவரது தொழிற்கும் காரணமாய் அவரொடு பொருந்தி நிற்குமாறு ஏகதேச சத்திகள் அக் காரணப்பகுதிகளை (ஐ இருபத்தொன்று) நூற்றைந்தாக்கிக் கொண்டனர். (எனவே, அவை பிரம இச்சா அகாரம், பிரமஞான அகாரம், பிரமகிரியா அகாரம் என்றற்றொடக்கத்தனவாகப் பெயர்பெற்று நிற்பனவாம்.) இனி அந்த நூற்றைந்தையும் மூலாதாரம் முதலிய ஆறாதாரங்களோடும், ஆஞ்ஞைக்கு மேல் உள்ள நிராதாரத்தோடும் கூட்டி மூலாதாரப் பிரம இச்சா அகாரம், மூலாதாரப் பிரமஞான அகாரம், மூலாதாரப் பிரம கிரியா அகாரம் என்றற் றொடக்கத்தனவாக உறழ்ந்து கூற, ஏழடுக்கிய நூற்றைந்தாம் (ஏழு நூற்றைந்து - 7 x 105 = 735 ஆம்) ஆதலின், அங்ஙனமும் ஆக்கினர்.
Special Remark:
அறை - பங்கு; கூறு. குண்டலி சத்தியைப் பிரமன் முதலியவரோடும் ஏழ் நிலத்தோடும் வைத்து இங்ஙனம் பலவாகப் பகுத்துக் கூறுதல், `உயிர்களின் உணர்வு அந்நிலங்களில் அதிதேவர் வழிவாக்கு வடிவாய் அளவற்றனவாகத் தோன்றும்` என்றற்கும், `அவை அனைத்தையும் ஒடுக்கித் திருவருளில் நிறுத்திப் பயன்பெற வேண்டும்` என்றற்குமாம். உணர்வுகள் அளவின்றித் தோன்றுதலையே,
ஒருபொழுதும் வாழ்வதறியார்; கருதுப
கோடியு மல்ல பல. குறள் - 337
எனக் கூறினார் திருவள்ளுவர். `எழு நூற்றஞ்சாக்கினர்; அவ் ஆக்கப் பாடு கலந்து விரிந்தது` என்க.
இதனால், `பலவகை உணர்வுகளையும், சிவயோக நெறியால் திருவருள் உணர்வில் ஒடுங்கச் செய்தல் வேண்டும்` என்பது கூறப் பட்டது.