ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றன
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

English Meaning:
Time Transcended in Mahima

Having seen breath transformed into light
No more does Time move; it stops;
While the Past merged into space
Of the Future He becomes the Lord.
Tamil Meaning:
எல்லாவற்றிற்கும் அடிநிலை ஒளியாகிய சிவத்தைக் கண்டபின், காலக் கழிவும் அங்ஙனம் கண்டவனது உணர்வில் தோன்றாது. இனி, எல்லாப் பொருள்கட்கும் மேலான தாகிய காலம், தன்னியல்பில் பொருள்களைத் தன்வழிப்படுத்து நடத்தி நிற்குமாயி னும், அவனது காலங்கள் அவனைக் கட்டுப்படுத்தாது அவன் வழியவேயாம்.
Special Remark:
`போவதும் இல்லை` என்றது, அப்போக்கு உணர்வில் தட்டாமைபற்றி. மேல் நிற்றல், எல்லாப் பொருட்கும் மேலே நிற்றல். வெளி உறுதல், வேறிடத்தில் செயலாற்றுதல். ``தான் நின்ற`` என்றது, `தனக்கு நிலைக்களமான` என்றபடி. தன்வழியாதல், தனது மாற்றத்தை விளைக்கமாட்டாது நிற்றல். `எல்லாவற்றினும் பெரிதாகிய காலத்தையும் அருள்வழி நின்று கடத்தலால், இது மகிமாவாயிற்று` என்பது விளக்கியவாறு. இதில் இரண்டடி யெதுகை வந்தது.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.