ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

பேரொளி யாகிப் பெரியஅவ் வெட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே. 

English Meaning:
When the Eight Siddhis are Attained

He who has mastered the siddhis eight high.
Will be the Lord of globe entire,
Gleaming shall be his garland of victory
And His Prana shall turn to peerless light.
Tamil Meaning:
பவயோகியர்க்குப் பெரும் பேறாய்த் தோன்றி விரிந்து விளங்குகின்ற, மேற்சொல்லிய உலகங்கள் எட்டனையும் தான் இருக்கும் நிலவுலகத்தோடு ஒத்தனவாகவே உணர்ந்து, அவற்றின் மேல் மனம் செல்லாது அடங்கிய சிவயோகி, இந்நிலவுலகம் முழு தினும் பொருந்தியுள்ள ஒன்றான ஒளியாகிய பிராண வாயுவின்வழிக் காணத்தக்க குண்டலி ஒளியைப் படிமுறையில் பெருகக் காண்பான்.
Special Remark:
`ஆகி` என்னும் எச்சம், `பெரிய` என்னும் பெயரெச்சக் குறிப்பைக் கொண்டது. மேல், `புவனங்கள்` என வாளா கூறியதனை, `எட்டு` என வரையறுத்துணர்தல் வேண்டும் என்பார், `அவ் எட்டையும்` எனச் சுட்டிக் கூறினார். அட்டமா சித்தி வகையில் உலகங்கள் எட்டாமாறு மேலே (பா.616) காட்டப்பட்டது.
``பாரொளியாக`` என்பதில், ``ஒளி`` என்பது `புலம்` என்னும் பொருட்டாய் நின்றது, இதனுள்ளும் ஆக்கம், உவமைப் பொருட்டு. பதைப்பு மனோவேகம்; அஃதாவது ஆசை. நிலவுலகத்தில் உயிர்களை நிலவச்செய்து அதற்கு விளக்கத்தைத் தருவது பிராணவாயுவாகலின், அதனை, ``தரணி முழுதுமாம் ஓரொளி`` என்றார். ``கால்ஒளி`` என்பதனை, ``காலால் அறியப்படும் ஒளி`` என விரிக்க. யோகத்தின் பயன், பிராணாயாமத்தால் குண்டலி ஒளியை அகத்துக் காணு தலாதலின், அங்ஙனம் காணப்படும் ஒளியை, ``காலொளி`` என்றார். `தாரொளியாக` என்பதனை, ``காரொளி`` என்பதன்பின் கூட்டுக. தார் - ஒழுங்கு; என்றது படிமுறையை. யோகியர்க்குக் குண்டலி ஒளி, `மின்னல், விண்மீன், விளக்கு, பகலவன், திங்கள்` என்னும் இவற்றின் ஒளிபோலப் படிமுறையாற் பெருகித் தோன்றும் என்பது மேலே (612) கூறப்பட்டது. இக்காட்சியை இங்குவந்து கூறியது, `பரசித்தி` எனத்தக்க வகையில் அருள் நிலை அனைத்தும் கைகூடிய பின்பே யோகத்தில் மனம் ஒருங்கி அதனை முற்றுப்பெறச் செய்யும் என்பது உணர்த்துதற்கு. இது, புதியதோர் அரண்மனையிற் புகுந்தவன் முதற்கண் அதனை முழுதும் சென்று கண்ட பின்னரே உரிய இடத்தில் அமர்ந்து இன்புறுதல் போல்வதாம்.
இதனால், பரசித்தி முழுதும் கைவரப் பெற்றபின்பே சிவயோகம் முற்ற முடிவதாதல் கூறப்பட்டது.
`உலகத்தை உணரும் பவயோகத்தினும், திரு வருளை உணரும் சிவயோகமே சிறந்தது` என்பதை உணர்த்துதற்கு அத்திருவருளே யோகத்திற்கு முதலாய் நிற்குமாற்றை இவ் வதிகாரத்துள் இங்கு நின்றும் பதினெட்டுத் திருமந்திரங்களால் உணர்த்துகின்றார்.