ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே. 

English Meaning:
Samadhi When Prana Reaches the Ninth Centre

When prana courses through adharas six
Then will nectar be,
Then Prana reaches the Seventh Centre of the Sun
And further onward the Eighth Centre the Moon;
In the Ninth Centre Prana attains Samadhi.
Tamil Meaning:
ஆறு ஆதாரங்கட்குமேல் ஏழாவதான உச்சி யளவும் பிராணவாயுவை ஏற்றியும் இறக்கியும் பயின்றால், ஆறு ஆதாரங்களிலும் தாரையாய்ப் பாயும்படி திருவருள் அமுதத்தை விளைத்து நிற்கும். இனி எட்டாந்தானமாகச் சொல்லப்படுகின்ற தலைக்குமேல் பன்னிரண்டங்குலம் பிராண வாயுவை நீக்கி நிற்றலால் ஆதார வேற்றுமைகள் நீங்கியபின், சுழுமுனையோடு மற்றை ஒன்பது நாடிகளிலும் பிராண வாயு ஒருதன்மைத்தாய் நிற்பதாம்.
Special Remark:
இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. `கால்` மூன்றனுள் முதலது, வாய்க்கால். ஏனைய இரண்டும், காற்று. `ஏழு, எட்டு` என்பவை அவ்வெண்ணு முறைக்கண் நின்ற இடத்தைக் குறித்தன. அமுதத்தை `இரதம்` (ரசம்) என்றார். விளைத்தற்கு வினை முதலாக மேற்சொன்ன நாயகியைக் கொள்க. இரட்டுதல் - மாறி மாறி வரச்செய்தல். யோகிகள் பிராண வாயுவைச் சுழுமுனை வழியில் மேல் ஏற்றவும், கீழ் இறக்கவும் வல்லராயிருப்பர். அவ்வன்மையைப் பிர மரந்திரம் வரையிலும் பெற்றவர்க்குச் சந்திர மண்டலத்திலுள்ள அமுதம் தாரையாய்க் கீழுள்ள ஆதாரங்களிலும் பாய்வதாம். துவா தசாங்குலத்தில் உணர்வு சென்றவர்க்கு வாயுப்பயிற்சி நீங்குவதால், அதனை, அந்த எட்டாந்தானம் வாங்கிக் கொண்டதாக ஓதினார். `அஃது அங்ஙனம் கொள்ள வைப்பவளும் நாயகியே` என்பது குறிப்பு. கொண்டு - கொள்ளுதலால். இடவகை - ஆதார நிலைகள். அவை ஒத்தலாவது, அவற்றில் வெவ்வேறு வகையாய் நிகழும் பிராணா யாமம் முதலிய உறுப்புக்கள் அங்ஙனம் நிகழாது துவாதசாங்குலத் தியானம் ஒன்றேயாக நிகழ்தல். `இந்நிலையில் பிராண வாயு, தானே தச நாடிகளிலும் நிறைந்து நிற்கும்` என்பார் ``ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே`` என்றார். சுழுமுனைப் பயிற்சியே சொல்லப்பட்டு வருதலின், அதனுடன் ஏனை நாடிகளிலும் ஒருபடித்தாய் நிற்கும் என்றவாறு. துவாதசாங்குலம் `நிராதாரம்` எனவும், அதனைக் கடந்த தாகிய துவாதசாந்தம், `மீதானம்` எனவும்படும். இத்திரு மந்திரத்தின் அடிகள் எண்ணலங்காரமாய், அடி முரண் பெற்று நின்றது.
இதனால், `ஆதார யோகம், நிராதார யோகம், மீதான யோகம் அனைத்தும் கைவரப் பெறுதல் திருவருளாலே` என்பது கூறப்பட்டது.