ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே. 

English Meaning:
The Three Gods Animate Three Nadis

Through the Nadis that pulsate
In the ear, eye and heart
Animates the one spark of Light Divine
That is God;
The Gods, Rudra, Vishnu, and Brahma
Respective by there seated art.
Tamil Meaning:
கடவுளருள் சிறந்தோராகிய உருத்திரன், மால், அயன் என்னும் மூவருங்கூட யோகத்தில் பத்து நாடிகளிற் கேட்கப் படுவனவாக மேலே சொல்லிய பத்து ஓசைகளாகிய முழக்கத்தைக் (பா.593) கேட்டலை விடுத்து, கண்ணிலும், இருதயத்திலும் நிலைபெற்று நின்று உடம்பில் துடிப்புள்ளளவும் `துஞ்சும்போதும் சுடர்விடு சோதி` (தி.5 ப.93 பா.8) யாகிய சிவனை அங்கே தியானம் செய்கின்றனர்.
Special Remark:
`மூவரும், நயனம் இருதயம் நின்று, நாடியின் ஓசை ஓ அற, சோதியை அங்கு உணர்ந்திருந்தார்` எனக் கூட்டுக. `துடிப்பு` என்பதன் முதனிலைப் பெயராகிய `துடி` என்பது நீட்டல் பெற்றது. ``பிரமனும்`` என்ற உம்மைச் சிறப்பு. ``ஓ`` என்பது ஒலிக்குறிப்பு இடைச்சொல். `ஓவுற` எனப்பாடம் ஓதி, ஓவுதல் - ஒழிதல் என உரைத்தலுமாம். ``மூவரும் உணர்ந்திருந்தார்`` என்றதனால், ``சிவனை அடைய விரும்புவோர் அவ்வாறு நிற்க`` என்பது குறிப்பெச்ச மாயிற்று. ``நாடி ஓசைகளைக் கேட்டுக் களித்திருத்தல் சித்தி யோகி கட்கே பொருந்துவது`` என்றவாறு. சோதியை நயனத்திற் காண்டல், புறநோக்கு உளதாயவழிச் செய்யும் பாவனை. இருதயத்திற் காண்டல், தாரணை தியான சமாதிகளால் சிவனது ஒளி உருவை இருதயத்தில் காணுதல். அங்ஙனம் காணவே, பவ யோகம் ஒழியச் சிவயோகம் உண்டாகும் என்பதாம். இதனுள் இரண்டடி எதுகை வந்தது.
இதனால், சிவ யோகத்தைத் தலைப்படுமாறு கூறப்பட்டது.