ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது வக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்
காலது வேமண்டிக் கண்டஇவ் வாறே. 

English Meaning:
Sakti Pervades Prana After Siddhis are Attained

The Way Prana mingles in Jiva
Is through Sakti of the Tender Vine
Prana pervades the five hundred then the ten.
And then the three nadis
And Sakti pervades Prana entire.
Tamil Meaning:
பிராணவாயுவும், உயிரும் தம்முள் இயைந்த வாற்றைக் கூறுமிடத்து, பிராணவாயு, உடம்பில் உள்ள நாடிகள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற சிவசத்தியுடன் முன்னர்ப் பொருந்திப் பின்னர், அஃது `ஐஞ்ஞூறு` என்றும், `பத்து` என்றும், `மூன்று` என்றும் சிறந்தெடுத்துக் கூறப்படுகின்ற நாடிகளில் நிறைந்து நிற்கும் வகையினாலேயாம்.
Special Remark:
``கொடி`` என்றது, உடம்பிற் பொருந்தியுள்ள நாடியை. அந்நாடிகள் இவை என்பது நூல்களின்வழி நன்கறியப்பட்டது ஆதலின், ``அக்கொடி`` எனப் பண்டறி சுட்டாற் கூறினார். கொடி நாயகி - கொடிகளில் நிறைந்து நிற்கும் தலைவி. ``நாயகி தன்னுடன்`` என்பதன்பின், `ஆய்` என்பது எஞ்சிநின்றது. உடம்பில் உள்ள நாடிகள் `எழுபத்தீராயிரம்` என்பதுயோகநூல் துணிவு. அவற்றுள், ஐந்நூறு சிறந்தன. அவற்றுள்ளும் சிறந்தன பத்து. அவைமுன்னே (பா.562) சொல்லப்பட்டன. அவற்றுள்ளும் சிறப்புடையன மூன்று; அவை, `இடை, பிங்கலை, சுழுமுனை` என்பன. `ஐந்நூற் றொருபத்து மூன்று` என்றது உம்மைத் தொகையேயன்றி, அத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்று. மண்டுதல் - செறிந்து நிற்றல். கண்ட - காணப்பட்ட. இவ்வாறே - இவ்வாற்றினாலேயாம். இத்திரு மந்திரத்துள் சத்தியின் செயல்களை வாயுவின்மேல் வைத்துச் சொற் பொருட் பின்வருநிலையாக அருளிச்செய்தார். இதனுள் குற்றிய லுகரம் பலவிடத்தும் கெடாது நின்று, உடம்படு மெய் பெற்றது.
இதனால், `யோகத்திற்கு முதலாகிய பிராண வாயுவை யோகிக்குக் கூட்டுவித்துப் பின் காத்து நிற்பது திருவருளே` என்பது கூறப்பட்டது. எனவே, உடலில் உள்ள ஆற்றல்கள் பலவும் இயற்கையாய் அமைந்தன எனக் கருதும் பவயோகிகளது கருத்தை விலக்கி, உண்மை யுணர்த்தியவாறாயிற்று.