ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.

English Meaning:
Conquest of Bindu Through Nadi

O! Jiva! You seek woman in lust
And Lo! Like a fawn are you caught in net;
And you know how to make
Central Nadi the Way Great,
The seed (Bindu) you kept for sale,
May your own be to consume.
Tamil Meaning:
இடைகலை பிங்கலை நாடிகட்கு நடுவே துலை நாப்போல நிற்கும் சுழுமுனை நாடியையே நல்வழியாகக் கொண்டு இயங்கத் தெரிந்தால், வலையில் அகப்பட்ட பெண் மானை வந்து அடையும் ஆண்மான்போல, அந் நாடியின் முடிவில் விளங்கும் சத்தியைத் தேடிச் சிவனும் வந்து பொருந்துவான். இந்நடு நாடி வழி, விலைக்கு விற்க வைத்திருந்த வித்துத் தனக்கே பயன்படுதல் போல்வதொரு தன்மையுடையது.
Special Remark:
மூன்றாம் அடியைத் தாப்பிசையாக முன்னும், பின்னும் இயைத்துப் பொருள் கொள்க. `தலைப்படும் ஆறு` எனற்பாலதனை, துணிவு பற்றி, `தலைப்பட்ட ஆறு` என்றார். பாசத்துப் பிணை, அன்புக்குரிய பெண்மான், முன்னர், `பிணை` என்றதனால், பின்னர், ``மான்`` என்றது, ``கலை`` என்பது விளங்கிற்று. ``பிணை மான்`` என்னும் தொகைச் சொல்லை ``பிணையை அணையும் மான்`` என விரித்துக்கொள்க. `தூவழி செய்தால், பிணைமான்போல், அண்ணல் தையலை நாடித் தலைப்பட்டவாறு` எனவும், ``தூவழி செய்தால் அது விலைக்கு உண்ண வைத்தது ஓர் வித்தாம்`` எனவும் இரு தொடராக இயைத்துரைக்க. சத்திவழியே சிவத்தைச் சார வேண்டுதலின், அதனை அண்ணல் தையலை நாடி வருவதாக ஓதினார்.
`விலைக்கு உண்ண` என்பது, ``பிறர், விலைக்குக் கொண்டு உண்ண`` என்றதாம். வைத்தது - வைக்கப்பட்ட நெல், ``ஓர்வித்தாம்`` என்றது வித்தாய்த் தனக்கே பயன்படுவதொரு தன்மையையுடையது என்னும் கருத்தினது. ``நெல்லை ஒருவன் அடுத்த ஆண்டிற்கு விதையாக வைத்துப் பெரும்பயன் கொள்ள நினையாமல் விலைக்கு விற்றுச் சிறிது பயன் கொள்ள இருக்கையில் அறிவு திருந்தினானாயின், அந்நெல்லே விதையாய் அவனுக்குப் பெரும் பயன்தருதல்போல, யோகமுயற்சியை ஒருவன் ஞானத்திற்கு வாயிலாகக் கொண்டு அதனை அடையக் கருதிச் செய்யாமல் சித்திகளைப் பெற விரும்பிச் செய்கையில் இடையே பக்குவம் அடைவானாயின், அவ்யோகமே அவனுக்கு ஞானத்திற்கு வாயிலாக அமையும்`` என்பது, ஈற்றடியிற் கூறப்பட்ட உவமையின் பொருள். `தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளையும்` (மதுரைக் காஞ்சி, 11) அத்துணைப் பயன், விலைக்கு விற்றலால் எய்துதல் கூடாமை அறிக.
இதனால், `சித்தியோகந்தானே முத்தியோகமாய்ப் பயன்படும்` என்பது கூறப்பட்டது.