ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே. 

English Meaning:
Practice of Kundalini Yoga

Kindle Kundalini Fire
That burns luminous in Muladhara
Send it up through Sushumna
The spinal column Central,
Course into it Prana breath
That runs through Nadis Sun and Moon,
That is the way to reach
The seven mystic worlds in Cranium
To them we tell this
That are wise to learn.
Tamil Meaning:
மூலாதாரத்தில் உள்ள அக்கினியை எழுப்பிச் சுழு முனை நாடி வழியே தலையளவும் செல்லச் செலுத்துதல், பிங்கலை இடைகலை வழியாகப் பிராணனை முறையே வெளியே ஓடவிட்டும், உள்ளே செல்ல இழுத்தும் பயிலுதல், ஏழுலகங்களையும் சுமந்து நிற்றல் ஆகிய முறைகளை நாம் சொன்னது, சிவனது அருள்வழியில் நிற்க விரும்புபவரை நோக்கியேயாம்.
Special Remark:
``ஆயினும், அவை மருள்வழியாகிய சித்தியை விரும்பி நிற்பவர்க்கும் பயன்படுகின்றன`` என்பது குறிப்பெச்சம். ``கீழங்கி`` என்பது, பின்முன்னாக மாறிநின்றது, ``கீழ் நீர்ச்செவ் வரும்பு`` (திருமுருகாற்றுப்படை, 29) என்பதுபோல. வாங்கி - மேல் ஏற்றி. ஓடவிடுதல், தாங்குதல்; இவற்றை இரவி மதி வழிகட்கு நிரனிறை வகையால் பொருத்துக. தாங்குதல் - தடுத்தல்; அஃது உள்ளிழுத்தலைக் குறித்தது. ``எங்கே யிருக்கினும் பூரி இடத்திலே`` (பா.558) என்றதனான் இம்முறை கூறப்பட்டமை காண்க. ``இரவி மதி வழி ஓடிட`` என்றதனால், `மதி இரவிவழி ஓடிட` என்பது பெறப்பட்டதாக வைத்து, இதனை ``விபரீத கரணி`` என்னும் எதிரியக்கலாக உரைப்பாரும் உளர். ``உலகங்கள் ஏழு`` என்றது, ஆறு ஆதாரங்களுடன், உச்சியை. இவற்றைச் சுமத்தலாவது, இவற்றின் இயல்புகளை உணர்ந்து அவைகளில் நிற்கப்பழகுதல். இவை ஏழும் ஒவ்வொரு கடவுளின் உலகமாக மதிக்கப்படுதல் அறிக. இந்த ஆதார நிராதார யோகங்களின் அருமைப் பாட்டினை இவ்வாறு விளக்கி, ``இத்துணை அருமுயற்சிக்குப் பயன் அட்டமா சித்திகளே என்பது நூல்களின் கருத்தன்று`` என அறிவுறுத்தருளினார். ``அருவழியோர்க்கே, அறிவுடையோர்க்கே`` என்பவை பாடமாயினும், கருத்து இதுவே என்க. தரித்திட - தரிக்கும்படி. ``ஆங்கது`` என்பது ஒருசொல் நீர்மைத்து.
இதனால், ``யோகமாகிய அரு முயற்சியால், திருவருளாகிய பெரும்பயன் பெற விரும்புதலே அறிவுடைமை`` என்பது கூறப் பட்டது.