ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தின் திருநடத் தோரே. 

English Meaning:
On the way to Siva Mukti

They are Siva Muktas
Who turned their thoughts to Siva
Who became Siva-suffused,
Who attained Mukti
By silence that leads to it;
They abandoned the senses five
In search of Divine Purity
Their thoughts centered on the Dance Cosmic.
Tamil Meaning:
(அட்டமா சித்திகளை அடைய விரும்பி அவற்றைப் பெறும் பவயோகம் செய்பவர் அதனிடையே மலபரி பாகம் காரணமாக) மனம் வேறுபட்டு, சிவனை அடையும் வேட்கை யராய் முத்திப்பேற்றிற்குரிய வழியை உணர்ந்து ஐம்புல ஆசையற்றுச் சிவஞான ஒழுக்கத்தில் நிற்கும் சிவயோகியராதலும் உண்டு. அவ் வாற்றால் தத்துவங்களின் நீங்கவேண்டி மேற்கூறிய ஐம்பூதங்களின் கட்டினின்றும் நீங்கினோர், உள்ளம் இறைவனது ஆனந்த நடனத்தில் ஒடுங்கப் பெறுவர்.
Special Remark:
சிவமயமாதல் சிவனை அடைதலாகிய ஒன்றிலே குறியாய் இருத்தல். `முத்தி` `முத்தம்` எனத் திரிந்து நின்றது. முத்தி, என்றது, அதனை அடையும் நெறியாகிய ஞான ஒழுக்கத்தை. ``உற்ற`` என்ற அநுவாதம், உறுதல் உண்மைபற்றிக் கூறியது. ``முத்தர்`` என்றது யோகியரை. சுத்தமாவது, தத்துவங்களினின்று நீங்குதல். ``ஐந்து`` என்றது, மேல், ``வான்முதல்`` எனவும், ``மண்முதல்`` எனவும் கூறிய பூதங்களை. அவற்றின் தொடக்காவது, ஆதாரங்களையும், மேற் கூறியவாறு அப் பூதங்கட்கு உரியனவாக்கி அவற்றின்வழி நிற்றல். சித்திகளை வெறுத்தோர்க்கு அம்முறை வேண்டாமையின், அவரை, ``அத்தொடக்கு அற்றவர்`` என்றார். ``பரத்தின் திருநடம்``, ஆறாவதன் தொகை.
இதனால், ``சித்தியோகமாகிய பவயோகம் சிவயோகமாய் வேறுபடுதலும் உண்டு`` என்பது கூறப்பட்டது. கூறவே, ``இப்பயன் கருதியே ஞான நூல்களும் யோகத்தை விதிக்கின்றன`` என்பது அறியப்படும்.
இங்கு நின்றும் மேற்குறித்த சிவயோகம் பற்றியே கூறுகின்றார்.