ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே. 

English Meaning:
In Samadhi Yogi Visions Light Divine

The Moon and the Sun are in the Uncreated Being
The Yogi that visions the Moon at the mystic junction
Nadis three
Is in Light merged;
He, attains Samadhi,
That had its beginning at the Navel Centre.
Tamil Meaning:
`சந்திரகலை` எனப்படுகின்ற இடநாடிக் காற்றும், `சூரியகலை` எனப்படுகின்ற வலநாடிக் காற்றும் சிவனது திருமுடியில் உள்ள சந்திரகலை எனப்படுகின்ற பரஞானமாகிய திருவருளும் ஒன்றாய் நிற்கின்ற தன்மையை, அனைத்து நாடிகளும் கூடுகின்ற இடமாகிய ஆஞ்ஞையிலே விளங்கக் கண்டு அத்திருவருளேயாகி நிற்பான், உலகியலை அறவே ஒதுக்கித் தள்ளிச் சிவசமாதி ஒன்றையே உடைய சிவ ஞான யோகியே.
Special Remark:
``தாணு`` என்றது, நீண்ட திருமேனியைக் குறித்தது. ``தாணுவின்`` என்றே போயினாராயினும், `தாணுவின்` தலையில் என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. சிவபெருமான் சந்திர கலையைத் திருமுடியில் அணிந்திருத்தல் ஞானத்தை உணர்த்தும் அடையாளமாம். திருவருளாகிய சிவனது சத்தி ஞானமாதல் வெளிப்படை. சிவபெருமான் தனது நெற்றிக்கு நேராகப் பிறையை அணிந்திருத்தல், இலாடத் தானத்தில் நின்று அறிவைத் தரும் குறிப்பினையும் உடையது. இடைநாடி வலநாடி வழிச்செல்லும் காற்றுச் சுழுமுனை வழிச் சென்று ஆஞ்ஞையை அடையத் திருவரு ளாகிய ஒளி விளங்குதலின், ஆஞ்ஞையை, சந்திரன் முதலிய மூன்றும் கூடும் இடம் என்றார். ஒளி யோகி - ஞான யோகி; என்றது சிவ யோகியை.
இதனால், ஆஞ்ஞையில் திருவருளைக் கண்டு தான் அதுவேயாய் நிற்றல் சிவயோகிக்கே கூடும் என்பது கூறப்பட்டது.