ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி

பதிகங்கள்

Photo

முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வாய்வலம்
உந்தியுள் நின்று வுதித்தெழு மாறே. 

English Meaning:
Light at the Manipura

Days are counted by astral Nazhigai sixty
And year by days three hundred and sixty;
Do meditate incessant through time thus reckoned,
And see the Light in the Manipuraka.
Tamil Meaning:
``ஓர் ஆண்டு முந்நூற்றறுபது கூறுகளைக் கொண்டது`` எனத் தொன்றுதொட்டுக் கொள்ளப்பட்டு வருகின்ற அக் காலக் கூறு - அஃதாவது, ``ஒருநாள் என்பது, நாழிகைகளின் தொகுதியால் அமைந்தது. அந்த நாழிகைகளை ஐந்து கூறாகப் பகுத்து அப்பகுதி ஐந்தையும் ஐம்பூதங்கட்கும் உரிய பகுதிகளாகப் பாவனை செய்துகொள். பின்பு நிலம் முதலிய பூதங்களின் ஆற்றல் சுவாதிட்டானம் முதலாகத் தோன்றி நிலைபெறுவனவாகக் கொண்டு யோகம் செய்.
Special Remark:
``நாள்`` என்னாது, ``காலம்`` என்றார். ``யாவும் காலத்தின் வழிப்பட்டு நடப்பன`` என்றற்கு. ``ஓர் ஆண்டிற்கு இத்துணை நாள்`` என்பதில் வேறுபாடுகள் பல உள. அவற்றுள் இங்குக் குறிக்கப்படுவது, ``முந்நூற்றறுபது நாள்களைக் கொண்டது`` என்பார், அதனை எடுத்தோதினார். இது கதிர்யாண்டு (சௌரமான வருடம்) இதற்கு முந்நூற்றறுபத்தைந்து நாள் சொல்லப்படுமாயினும், ஐந்து நாள்களை நாயனார் கொண்டிலர். இவ் யாண்டு ஒன்றே மக்கட்கு ஒரு வயது. இதன்படி மக்கள் வாழ்நாள் காலம் நூறு வயது. இனிக் கிரக தசா வருடங்கள். ``முந்நூறு நாள்கள் கொண்டது ஒரு வருடம்`` என்னும் கணக்கில் அமைந்தவை. அதன்படி, ``மக்கள் தாய் வயிற்றில் ஓர் ஆண்டுக் காலம் இருக்கின்றனர்`` என்பதும், ``பிறந்தபின் நூற்றிருப தாண்டு வாழ்வர்`` என்பதும், ``அந்நூற்றிருபதாண்டுகளும் ஒன்பது கோள்களுக்கு ஏற்ற பெற்றியால் அமைந்து நிற்கும்`` என்பதும் சோதிட நூற்கொள்கைகள். எனினும், இஞ்ஞான்று கிரகதசா வருடங்களும், முதற்கண் கூறிய கதிர்யாண்டின்படியே கொள்ளப்படுகின்றன.
``அறுபது நாழிகை கொண்டது ஒரு நாள்`` என்பதில் பரத கண்டத்தில் வேறுபாடின்மையால், அதனை விதந்தோதாது வாளா, ``வந்தது, நாழிகை`` என்றார். ``நாழிகையால்`` என உருபு விரித்து, ``நாழிகையால் வந்தது`` என மாறிக் கூட்டுக. ``அவற்றை வான் முதலாயிடச் சிந்தைசெய்`` என ஒருசொல் வருவித்துக் கொள்க. ``வலம் மண்முதல் உந்தியுள் நின்று உதித்தெழுமாறு தேர்ந்தறிவாய்`` எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. ``தேர்ந்தறிவார் வலர்`` என்பது பாடமாயின், இதனை, யோகியரது இயல்பாக்கி உரைக்க. ``உந்தி`` என்றது இங்கு அதற்குக் கீழ் உள்ள சுவாதிட்டானத்தை.
இதனாற் சொல்லியது, ``ஒரு நாளில் உள்ள நாழிகையை ஐந்து கூறிட்டு அக்கூறுகளை ஐந்து பூதங்கட்கு உரியவாக்கி, சுவாதிட்டானம் முதலிய ஆதார யோகங்களை அப்பூதங்கட்கு உரிய அந் நாழிகைகளில் செய்தல் வேண்டும்`` என்பதாம். ``ஒருநாளின் தொடக்கம் வைகறைப் போது`` எனக் கொள்ளப்படுதலால், பகலவன் தோற்றத்திற்கு முன் ஆறு நாழிகையை நிலம் என்னும் பூதத்தின் காலமாகக் கொண்டு முதலதாகிய சுவாதிட்டான யோகத்தைத் தொடங்கல் வேண்டும். பின் அவ் ஆறு நாழிகை நீர், நெருப்பு, காற்று, வானம் என்பவற்றுக்கு உரியனவாகக் கொண்டு மணிபூரகம் முதலாக ஆஞ்ஞை வரையில் செல்லுதல் வேண்டும். செல்லின், பகல் பதி னெட்டு நாழிகை முதல் இருபத்து நான்கு நாழிகை வரையில் ஆஞ்ஞையில் நிற்கவேண்டி வரும். யோக நிலையில் இதனோடே பகற் காலம் முடிவுறும். பின்னும் இவ்வாறே சுவாதிட்டானம் முதலாகத் தொடங்கி, இரவு பதினெட்டு முதல் இருபத்து நான்கு நாழிகை வரையில் உள்ள பகுதியில் ஆஞ்ஞை யோகத்தில் இருத்தல் வேண்டும். இவையெல்லாம் உய்த்துணர்ந்து உரையிற் கொள்ளப்படும். ``வான் முதலாயிட`` என்பதற்குச் ``சூரியோதயம் தொடங்கி`` எனவும், ``மண் முதல்`` என்பதற்கு ``அத்தமனம் தொடங்கி`` எனவும் தாம் வேண்டுமாறே அச்சொற்களை வருவித்துக்கொண்டு தமக்குத் தோன்றியவாறேயும் உரைப்பர். அஃது, `உந்தியுள் நின்று உதித்தல்` என்றதனோடு ஒவ்வாமை அறிக.
`இவ்வாறு இடைவிடாது யோகத்தில் இருப்பின், உண்டல், உறங்கல் முதலியவற்றிற்குக் காலம் எப்பொழுது` என ஐயுறல் வேண்டா; என்னை? இது, `ஆதார யோகத்திற் குரிய காலமுறை இவ்வாறு கொள்ளத்தக்கது` எனக் கூறியதன்றி, `அவற்றை இடையறாது செய்தல் வேண்டும்` எனக் கூறியதன்று ஆகலான். யோகமாகிய அறிதுயிலில் இருப்போர் அதனை விடுத்து உலகியலில் விழித்தல் எளிதாதலின் அஃது எந்த நேரத்திலும் இயல்வதேயாம். சிலர் சில நாள்காறும் ஊண் உறக்கம் இன்றி இடைவிடாது செய்ய வல்லராயும் இருப்பர். ஆகவே `இஃது அவரவரது ஆற்றலுக்கு ஏற்பக் கொள்ளப் படுவதே` என்க. எனினும், பொருள் ஈட்டலில் கருத்துடையவர் பொழுதை வீண்போக்குதலும், பொருட் பேற்றிற்கு மாறானவற்றைச் செய்தலும் இல்லாமை போல. யோகத்தில் கருத்துடையோரும் பொழுதை வீண்போக்குதலும், யோகத்திற்கு மாறானவற்றைச் செய்தலும் இலர் என்க.
இங்ஙனமாகவே, மேல் (பா.632) ``ஏழானதிற் சண்டவாயுவின் வேகியாம்`` என்பது முதலாகக் கூறிய ஆண்டுக் கணக்குகள் இங்குக் குறித்த முறையில் ஆதாரயோகம் நிகழும் நாழிகை யளவால் அமைவ தன்றி, ஏனையோர்க்குப் போலப் பகலவனது தோற்ற மறைவு மாத்திரையானே அமைவதன்று என்பது பெறப்படும். அந்த நாழிகைத் தொகையே, மேல், (பா.629) ``இருபதினாயிரத்தேழ்நூறு பேதம்`` எனக் குறிக்கப்பட்டது. ஒருநாளைக்கு அறுபது நாழிகையாக, முந்நூற்றறுபது நாள்களுக்குக் கணக்கிட வருவது. (360 x 60 = 21600) இருபத் தோராயிரத்து அறுநூறு நாழிகை. இதில் பதினைந்துநாள் குறையினும் ஓராண்டாகவே பயன்தரும் என்றற்கே, தொள்ளாயிர நாழிகை தள்ளி, (21600 - 900 = 20700) ``இருபதினாயிரத்து ஏழ் நூறு பேதம்`` எனக் கூறினார். எனவே, சுவாதிட்டானம் முதலிய ஐந்தில் ஒவ்வோர் ஆதார யோகமும் நாலாயிரத்து நூற்று நாற்பது (4,140) நாழிகையிற் குறையாது சம அளவில் நிகழின், அதுவே யோகத்தின் ஓராண்டு எனவும், `அவ் வகையில் பன்னிரண்டாண்டுகள் சென்ற பின்பே சித்திகள் எய்தப் பெறும்` எனவும் கொள்க. `இவ்வாறு சொல்லிய யோக காலத்தை, யோகிகள், மந்திரம் கணிப்பவர் தாம் கருதிய உருவளவை இடை விட்டாயினும், இடைவிடாதாயினும் கணித்து முடித்தல் போல முடிப்பர்` எனவும், அவ்வாறு முடிக்குங்கால் இங்குக் கூறியமுறை வழுவாது செய்து முடிப்பர் எனவும், `யோகப்பயிற்சி உடையவர் தாம் விரும்பும் ஆதார யோகத்தை விரும்பியவாறே செய்ய வல்லராய் இருப்பர்` எனவும் உணர்க. மூலாதாரயோகம், குண்டலியை எழுப்பு தல் மாத்திரையாய் அமைதலின், அது சுவாதிட்டான யோகத்தில் அடங்கிற்று. ``நின்று வுதித்து`` எனக் குற்றியலுகரம் கெடாது நின்று, உடம்படு மெய் பெற்றது.
இதனால், `பன்னிரண்டாண்டு யோகம் செய்க` என மேற்கூறிய ஆண்டின் இயல்பு கூறப்பட்டது.