ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 8. தியானம்

பதிகங்கள்

Photo

அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே. 

English Meaning:
Transcending Tattvas six and thirty unreal,
Destroying Maya`s layers thick,
Transformed into Jnana Pure by Grace
Themselves that Grace inseparable Becoming
They who achieved thus
Were the good souls
That the Way of Dhyana knew.
Tamil Meaning:
யோகத்தை முறைப்படி பயின்ற அடியவரே, அறிவில்லாத பொருளாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து அறிவுருவாய் நின்று, அதனால், வலிய மாயையின் மயக்கத்தையும் வென்று, இறைவனது திருவருளால், வேறு நில்லாது அவனது தன்மையையே தமது தன்மையாகப் பெற்று நிற்கின்ற ஞானத்தை நிலைபெற உணர்ந்தோராவர்.
Special Remark:
யோகமும் வழிபாடேயாதலின், அதனைச் செய் வோரை, ``அன்பர்`` என்றார். ``அன்பரே`` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. ``நிலையாக`` என ஆக்கம் வருவித்துரைக்க. ``அறிந்தார்`` என்றதனை, ``அறிவறிந்த மக்கட் பேறு`` (குறள், 61) என்றாற் போல, ``அறிதற்கு உரிமையுடையார்`` எனக் கொள்க. `துணிவுபற்றி, எதிர்காலம் இறந்த காலம் ஆயிற்று` என்றலுமாம். ``நெறியான அன்பர்`` என்பதை முதலில் வைத்து உரைக்க.
இதனால், ``யோகம் முற்றியவர்க்கே ஞானம் கூடும்`` என, யோகத்தது இன்றியமையாமை கூறப்பட்டது. இதனைச் சமாதி இறுதியிற் கூறாது ஈண்டுக் கூறினார், தியானத்திற்கும், சமாதிக்கும் இடையே உள்ள வேற்றுமை சிறிதேயாகலின்.