ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 8. தியானம்

பதிகங்கள்

Photo

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசம் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே. 

English Meaning:
To Transcend Mandala is to be Exalted
In the dark chamber of the drooping heart
Are the Mandalas Three,
He who becomes one with them
And pierces the sushumna Nadi
Shall know weariness none;
Tamil Meaning:
ஒவ்வொரு பயனைத் தருபவர் ஒரோவொரு தேவராக நினைந்து அவர் அனைவரிடத்தும் ஓடி இளைக்கின்ற நெஞ்சத்தைத் தனது சரக்காக உடைய இருட்டறையாகிய உடலி னுள்ளே தனித்தனி முதன்மை பெற்றுத் தோன்றுகின்ற மண்டலங்கள் மூன்றிலும் பொருந்தி ஊடுருவிச் செல்வதாகிய பெரிய நூல் அவ்வாறு அவற்றை ஒன்றுபடக் கோத்துச் செல்லுமாயின், உயிர் மேற்கூறிய இளைப்பை அகன்று, மார்கழி நீராட்டுப்போல இன்ப வெள்ளத்தில் மூழ்கிச் சிறக்கும்.
Special Remark:
இருட்டறை, அறியாமைக்கு இடமாகிய உடம்பு. `நிட்டையிலா உடல்` (தி.9 திருப்பல்லாண்டு, 3) என்றாற்போல, ஞானத்திற்கு ஏதுவாகாத குறையை உடல்மேல் ஏற்றிக் கூறுதலும் மரபாதல் அறிக. `அறியாமை காரணமாக மூன்றும் மூன்று தனி மண்டலங்களாய்த் தோன்றுகின்றன` என்பது உணர்த்துதற்கு, `இருட்டறை யுள்ளே முளைக்கின்ற மண்டலம் மூன்றினும்` என்றார். துளை, முதனிலைத் தொழிற் பெயர். `துளைத்தலை யுடைய பாசம்` என்க. துளைப்பது ஊசியேயாயினும், `இஃது ஊசியின்றியே உருவிச் செல்வதோர் அதிசய நூல்` என்றவாறு. இது குண்டலி சத்தி என உணர்க. சத்திநிபாதரல்லாதவர்க்கு இம் மண்ட லங்களைத் துளைத்துக் கோத்து ஒன்றாக்கமாட்டாது நிற்கும் இந்நூல், சத்தி நிபாதர்க்குத் துளைத்து ஒன்றாகக் கோக்கும் வன்மையுடையதாம் என்பார், `பெரும்பாசம்` என்றார். பாசம் - நூல்; கயிறு. நெளிவும், வளைவும் உடையதாதல் பற்றி, `பாம்பு` எனப்படுகின்ற இதனை, இங்கு, `பாசம்` என்றார். `பிறர்க்குப் பல தெய்வ உணர்வைத் தருகின்ற குண்டலிசத்தி, சத்திநிபாதர்க்குச் சிவனது தனிப்பெரு முதன்மையைத் தந்து நிற்கும்` என்பது கருத்து. சிவயோகம் அல்லாத யோகம் பிறவியைப் போக்காமையேயன்றி அதனை வருவித்தலும் செய்யு மாகலின், அது பவ யோகமாம். `மார்கழி` என்பது, அத்திங்களில் ஆடும் நீராட்டைக் குறித்தது. `மார்கழி போல` என உவம உருபு விரிக்க.
இதனால், சிவத்தியான யோகமே பேரின்பத்தைத் தருவது என்பது கூறப்பட்டது.