ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 8. தியானம்

பதிகங்கள்

Photo

கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே. 

English Meaning:
Through eye, tongue, nose and ear
And the organ Intellect
There is an Ancient One that pervades as Nada,
Inside the palatal cavity
He shows the Cosmic Light;
He gave the fleshy body,
That we redeemed be.
Tamil Meaning:
கண் முதலிய பொறியறிவின் சேர்க்கையால் நம்மைப் பண்படுத்தி நின்ற முதற்பொருள் ஒன்று உளது. அஃது, எல்லையற்ற பேரொளியாயினும், அதனை நாம் உள் நாக்கினை ஒட்டி உள்ள சிறிய துளை வழியில் சென்று காண்கின்ற ஒரு சிற்றொளியாகத் தரிசிக்கச் செய்தவாற்றால், `பாம்பு` எனப்படுகின்ற குண்டலி சத்தி நம்மை உய்வித்தது வியக்கத்தக்கது.
Special Remark:
ஞானக்கூட்டம் - ஞானத்தொடு கூடும் கூட்டம். கருவி கரணங்களாகிய மாயேயங்களோடு கூடுதலால் உயிர் பெறுவது அறிவு விளக்கமும், அவ்விளக்கத்தை அவ்வாற்றால் உயிர்கள் பெறச் செய்வது திருவருளும் ஆதலால், ``பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு`` என்றார். அப்பொருளை இங்ஙனம் சிறப்பித்துக் கூறவே, `அதனைக் காணுதலே உயிர் பெறத்தக்க பேறு` என்பது போந்தது. `இனி அப்பேற்றை அடைய வழியறியாது திகைக்கின்ற உயிர்க்கு வாசி யோகத்தின் வழிக் கிடைக்கும் குண்டலி சத்தியே அதனை அடைவித்து உதவி செய்வது` என்பார் ``அண்ணாக்கின் ... ... பிழைப்பித்தவாறே`` என்று அருளினார். `வியக்கத்தக்கது` என்பது சொல்லெச்சம். `கொல்லும் இயல்புடைய பாம்பு, பிழைக்கச் செய்தது வியப்பு` என்பது நயம். பிள் நாக்கி - பிளவுபட்ட நாவை யுடையது; பாம்பு. அண்ணாக்கினை அடுத்துள்ள துளைவழி உச்சியை அடைகின்ற பிராணவாயு, அவ்வுச்சி வழியாகப் புருவ நடுவை அடையும் சுழு முனை நாடியைத் தாக்குதலால், ஆஞ்ஞையில் அனுபவம் நிகழ்தல் பற்றி, ``அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டி`` என்றார். ``நம்மைப் பிழைப்பித்தவாறே`` எனத் தமது அனுபவத்தைக் கூறிய வாற்றால், `அவ்வொளியைக் காண வேண்டுவார்க்கு வழி இதுவே` என்பது குறிப்பெச்சமாயிற்று. இங்ஙனம், சுருங்கக் கூறினாராயினும், `தாரணையில் மின்னல்போலத் தோன்றுகின்ற அவ்வொளியை இடைவிடாது உன்ன, அவ்வொளி மறைவின்றி நின்று பயன் தரும்` என விரித்துரைத்துக் கொள்ளப்படும்.
இதனால், ஆஞ்ஞைத் தியானத்தின் இயல்பு கூறப்பட்டது.