ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 8. தியானம்

பதிகங்கள்

Photo

பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியில்ஓர் ஓசனை நீள்இது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே. 

English Meaning:
The mystic bed-chamber is day-light eternal
No darkness invades;
There is a way
This body to fire-chamber consigned not be,
The light of this knowledge
Is by meditation prolonged;
In the lunar region
Knows not end of Light ever.
Tamil Meaning:
மேற் (பா. 568-573) கூறிவந்த இடங்களுள் முடிவாகிய பள்ளியறையில் பகலன்றி இரவே இல்லை. இவ்வொளி யிடத்தை அடைய நினைத்தால் இஃது ஓரு யோசனை தூரத்தில் உள்ளது. இதனை அடைந்துவிட்டால், வீட்டை எக்காலத்தும் தீப்பற்றிக் கொள்ளாமலும் காப்பாற்றலாம். இப்பள்ளியில் சென்றவர் விழித்தெழுந்து வெளிப்போத வேண்டுவதில்லை.
Special Remark:
நாத மூர்த்தி விந்துச் சத்தியுடன் பிரிவின்றி நின்று அறிவைப் பிறப்பிக்கும் இடமாதல் பற்றியும், தியான யோகத்தின் முதிர்ச்சியில் ஆன்மா ``சமனை`` என்னும் சத்தியோடு கூடி நிற்கும் இடமாதல் பற்றியும் ஆஞ்ஞையை, ``பள்ளியறை`` என்றார். ``இதனை அடைந்துவிட்டால்`` என்பது இசையெச்சம். ``அறையில் கொள்ளி கொளுந்தாமற் காக்கலாம்`` என மாற்றி உரைக்க. அறை, உடம்பு. ``தியானம் முதிரப் பெற்றோர்க்கு வாழ்நாள் நீட்டிப்பும் உளதாகும்`` என்றபடி. `ஓர் ஓசனை நீள்` என்பது சிலேடை. ஓர் ஓசனை (யோசனை) ஒப்பற்ற தியானம். நீளம் - உயரம்; முடிவு. ``நீளம்`` என்பது கடைக்குறையாயிற்று. வெள்ளி அறை, சுவரும், நிலமும் வெள்ளியால் ஆக்கப்பட்ட அறை. ``ஒளியிடம்`` என்பது உண்மைப் பொருள். `அவ்வெள்ளி அறை` எனச் சுட்டு வருவித்து உரைக்க. ``விடிவில்லை`` என்றது, ``எழுந்து வர வேண்டுவதில்லை`` என்பதைக் குறித்த குறிப்பு மொழி.
இதனால், தியான யோகத்தின் முடிவு நிலையது சிறப்புக் கூறப்பட்டது.