ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 8. தியானம்

பதிகங்கள்

Photo

மனத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே. 

English Meaning:
Light the Lamp of Mind
And dispel the Darkness of Egoity;
Extinguish the Fire of Wrath
And brighten all lamps within
Thenceforth alike,
The Mind`s Lamp is an undying Lamp indeed.
Tamil Meaning:
மேல் மாடத்தில் ஏற்ற வேண்டுவதாகிய விளக்கை நன்றாக ஏற்றிய பின்னும், மாளிகையை அழிக்க அதன் ஒரு பக்கத்தில் பற்றியுள்ள `சினம்` என்னும் நெருப்பை முற்ற அணைத்துவிட்டுக் கீழ் நிலையில் உள்ள மற்றைய விளக்குகளும் அணைந்து போகாதபடி எல்லாவற்றிலும் திரியை ஒரு சேரத் தூண்டி வைத்தால், முன்பு மேல் மாடத்தில் ஏற்றப்பட்ட விளக்கு உண்மையில் ஏற்றப்பட்டதாகும்.
Special Remark:
`மனம்` என்பது இங்குச் செய்யும் உருவகத்திற்கு ஏற்ப, `மேல்மாடம்` எனப் பொருள் தருதலை, அதனை எடுத்தல் ஓசையாற் கூறிக் காண்க. அவ்வாறே ``அனைத்து விளக்கும்`` என்பதும் இங்கு உரைத்தவாறே பொருள் படுதலைப் படுத்தல் ஓசையாற் கூறியறிக. சினத்து விளக்கு, உருவகம். இதில் உள்ள ``விளக்கு`` என்பது காரண இடுகுறியாய் நில்லாது, காரண அளவில் நின்று, நெருப்பைக் குறித்தது. எருக்குதல் - அழித்தல். `நெருக்கி` என்பது பாடம் அன்று. ``அனைத்து விளக்கு`` என்றது, கருவி கரணங்களை. ``திரிதூண்ட`` என்பதில், சினை முதலொடு சார்த்தப்பட்டது. மனத்து விளக்கு அது - மனத்தில் ஏற்றத்தக்க விளக்காகிய அந்த விளக்கு, சிவ ஒளி. ``மாயா விளக்கு`` என்று, மனத்து விளக்கின் இயல்பைத் தெரிவித்துக் காட்டியது. இதன்பின் நின்ற தேற்றேகாரம், அஃது அத்தன்மைத்தாயே நிலைபெறுதல் காட்டி நின்றது. இங்கு, `ஆகும்` என்பது எஞ்சி நின்றது.
`தியானம்` என்பது, உலகர்கொள்ளும் உறக்கம் போல்வது அன்று என்பதற்கு, ``அனைத்து விளக்கும் திரியொக்கத்தூண்ட`` என்றார். எனவே, `யோகநிலையில் நிற்பவர்கட்குக் கருவி கரணங்கள் செயற்படாது நிற்குமேயன்றி, மடிதல் இல்லை` என்பது விளங்கும். இதனை விளக்கவே இந்நிலையே, `யோக நித்திரை, அறி துயில்` என்னும் பெயர்களால் கூறுவர். இவ்வாறன்றிக் கேவல சுழுத்தியாகிய உறக்கம் வருமாயின், இருள் மூடிக் கொள்வதல்லது விளக்கேற்றிய தாகாது; அதனைக் குறிக்கவே, பின்னிரண்டடிகளை அருளிச் செய்தார். இஃது அறியாது ஏகான்ம வாதிகள், `அன்றாடம் உலகர்க்கு வருகின்ற கேவல சுழுத்தியே பேரின்ப நிலை` எனக் கூறி மகிழ்வர். ``சினத்து விளக்கினைச் செல்ல எருக்கி`` என்று வெகுளி நீக்கம் கூறிய தனால், ஏனைக் காமம், மயக்கம் என்பவற்றது நீக்கமும் கொள்ளப் படும். `காம வெகுளி மயக்கங்கள் அற்றிருத்தல்` என்றால் `உறங்கிக் கிடப்பது என்பது பொருளன்று` என்றதற்கு, ``அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட`` என்றார்.
இதனால், தியானத்தில் செயற்பாலன, தவிரற்பாலன கூறப்பட்டன.