ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 8. தியானம்

பதிகங்கள்

Photo

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே. 

English Meaning:
As Kundalini Fire glows in Adharas six,
The Primordial Anava Darkness flees,
In tameness followed by Indriyas Five;
Who involute in Tanmatras, their substrate;
And they in turn in Nada;
And shall reach Feet of the Lord
That is Refuge of All.
Tamil Meaning:
ஆதார மூர்த்திகள் வெளிப்படும் இடமாகிய ஆறு ஆதாரங்களுள்ளும் உள்ளொளியாகிய பிரமன் முதலிய ஐவரையும் தியானிக்கும் தியானத்தால், புகழப்படுகின்ற ஒளியை உடைய, ஆயினும், சிவனைத் தலைப்பட ஒட்டாத - மயக்கம் நீங்க, அதன்பின், மேம்பட்டவராக மாயோனை முதலில் வைத்து இறுதிக்கண் நாதமூர்த்தியைக் கூட்டி எண்ணும் ஐவருள் நாதமூர்த்தியும் ஒடுங்கக் காணின், பரமசிவனது திருவடியை அடைதல் கூடும்.
Special Remark:
`ஆறினுள்ளும்\\\' என உருபு விரிக்க. `ஆறினுள்\\\' எனப் பாடம் ஓதுதலும் ஆம். உம்மையுடைய இப்பாடத்திற்கு, முற்றும்மை எச்சப்பொருள் தந்ததாக உரைக்க. அங்கி - ஒளி. உள்ளே விளங்கு தலின் ஆதார மூர்த்திகளை `உள்ளொளி\\\' என்றார். ஆஞ்ஞையாகிய ஆறாவது ஆதாரத்தில் விந்துச் சத்தியுடன் விளங்குபவர் நாதமூர்த்தி. ஆகவே, அவருக்குக் கீழுள்ள ஐவராலும் பத்துவகை ஓசைகளைக் கேட்கும் தியானயோகம் முதிர்ந்து வருதலை இருள் நீங்குதலாகக் கூறினார். இங்கு \\\"இருள்\\\" என்பது, சிவாநுபவத்தைப் பெற ஒட்டாது தன்னையே கேட்டு நிற்கச் செய்யும் பத்து வகை ஓசை நிகழ்ச்சியே என்றற்கு, \\\"துதிக்கின்ற தேசுடை\\\" என்றும், ஆதார மூர்த்திகளுள் கீழுள்ளவன் மலரோன் ஆதலின், அவனுக்கு மேல் உள்ளவரை `அதிக் கின்ற ஐவர்\\\' என்றும் தெரித்துக் கூறினார். நாதம் - நாதமூர்த்தி. அவர் ஒடுங்கினமை கூறவே, ஓசை ஒடுங்கினமை தானே பெறப்பட்டது. கதி - புகலிடம். `கதியாகிய ஈசன்\\\' என்க. `கதியாகிய கழல்\\\' எனினு மாம். \\\"கதி\\\" எனவே, அஃது ஒன்றே அடையத் தக்கது என்றவாறு.