ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 8. தியானம்

பதிகங்கள்

Photo

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டலம் ஆயம்மற் றோர்க்கே. 

English Meaning:
There is a way of reaching the Mandalas Three.
In each is its respective God;
Be you blessed
By the God appropriate
Then each Mandala leads to the other.
Tamil Meaning:
(அக்கினி மண்டலம் முதலாகக் கூறிய மண்டலங்கள் மூன்றுக்கும் சிவபெருமான் ஒருவனே முதல்வனாக அறிந்து, எவ்விடத்தும் அவனையே தியானித்து அவனாகின்ற யோகமே உண்மை யோகம்; அது சத்தி நிபாதர்க்கல்லது கூடாது. அது நிற்க.) அம் மூன்று மண்டலங்கட்கும் அக்கினி முதலிய மூவரையே முதல்வராகக் கருதி ஆங்காங்கு அவ்வவரைத் தியானித்து அவரா கின்ற பொது முறைமையும் உண்டு. (அது சத்திநிபாதரல்லாதார்க்கு உரியதாம். மூன்று மண்டலங்கட்கும் மூவர் முதல்வராகிவிடின், கலாம் விளையுமன்றோ எனின்,) மூவரையும் முதல்வராக எண்ணுவோர், ஒருவர் மற்றை இருவர்க்கும் தோழமை யுடையவராக, மூவரிடை இணக்கமே கொள்ளுதலின், கலாம் விளையாதாம்.
Special Remark:
``அவ்வவர் மண்டலம் ஆம் பரிசு`` என்றது, ``மூன்று மண்டலங்களையும் தனித்தனி மண்டலங்களாகக் கருதும் முறை`` எனவும், ``அவ்வவர் மண்டலத்து`` என்பது, ``அம்முறையுள்`` எனவும், ``அவ்வவர்க்கே வரில்`` என்றது, ``அவரவருக்கே உரிய தாய்விடின்`` எனவும் கூறியவாறாம். ``அவ்வவர் மண்டலம் மற்றோர்க்கு ஆயம்`` என மாறிக் கூட்டுக. ஆயம் - தோழமை.
இதனால், ``இறப்பில் தவம்`` (சிவஞானபோதம், சூ.8, அதி.1) எனப்பட்டு ஞானத்தைப் பயக்கும் சிவயோகத்தின் வேறான யோகமும், ``யோகம்`` எனச் சிலரால் மேற்கொள்ளப்படுகின்றது எனமேல் (பா. 557) கூறியதனை
உளத்துட் கொண்டு, அம்முறை பற்றிய மும்மண்டலங்களின் இயல்பு ஈண்டுக் கூறப்பட்டது.