ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்

பதிகங்கள்

Photo

அறிவறி யாமை இரண்டும் அகற்றிச்
செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்
பிறிவறி யாத பிரான்` என்று பேணார்
குறியறி யாதவர் கொள்ளறி யாரே.

English Meaning:
Adoration Way to Reach Goal

Jiva`s knowledge and Jiva`s ignorance
Both He dispelled;
And all Supreme Knowledge Siva pervasive stood;
Leave Him not;
Adore Him as Lord;
Those who know not this way,
Will never the Goal reach.
Tamil Meaning:
கருவி கரணங்களால் வரும் அறிவைக் கொண்டு புறப் பொருள்களை அறிந்து வருகின்ற சிற்றறிவையும், கருவிகள் முடங்கியவழி ஆணவ மலத்தால் உண்டாகின்ற அறியாமையும் ஆகிய இரண்டையும், எங்கும் நிறைந்துள்ள சிவனது பேரறிவால் நீங்கும்படி நீக்கி, அந்த அறிவினாலே சிவனை, `அவனே உயிர்களில் என்றும் நீக்க மின்றி நிறைந்திருக்கின்ற முதல்வன்` என உணர்ந்து அவனையே பற்றி நிற்கும் முறையை அறியாதவர்கள் (தாம் மெய்ப்பொருளை அறிந்து பற்றிவிட்டதாகக் கருதிக்கொள்ளினும்) அது மாட்டாதவரே ஆவர்.
Special Remark:
மேற்சொல்லப்பட்ட சீவ துரியம் பிராசாத யோகம், சிவ துரியம் ஆகியனவே மெய்ப்பொருளை அடையும் நெறியாகலானும், அவை சைவ சித்தாந்தத்தில் மட்டும் சொல்லப்படுதலாலும் ஏனைச் சமயத்தார் அவற்றை அறிந்து அவற்றின் வழி மெய்ப்பொருளை அடையமாட்டார்` என்றபடி. சிவஞான சித்தியும் இவ்வாறு,
``சித்தாந்தத் தேசிவன்தன் திருக்கடைக்கண் சேர்த்திச்
செனனம் ஒன்றிலே சீவன் முத்தராக
வைத்தாண்டு மலம்கழுவி ஞான வாரி
மடுத்(து) ஆனந்தம் பொழிந்து, வரும் பிறப்பை அறுத்து, முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன் என்று
மொழிந்திடவும், உலகரெல்லாம் மூர்க்கராகிப்
பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப்
பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இது என்ன பிராந்தி``
-சுபக்கம் - சூ. 8. 16.
என இரங்கிக் கூறுமாறு காண்க.
``செறி அறிவாய் எங்கும் நின்ற சிவன்`` என்றது உடம்பொடு புணர்த்தது ஆதலின் அதற்கு இவ்வாறு உரைக்கப் பட்டது. குறி - குறிக்கோள்; என்றது கொள்ளத்தக்க பொருளை. `கொள்ள` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `கொள்ளவும்` என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. ஏகாரம், தேற்றம்.
இதனால், பிற சமயத்தார்தம் நிலைநோக்கி இரங்குதல் கூறப்பட்டது.