ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்

பதிகங்கள்

Photo

நனவாதி ஐந்தையும் நாதாதி வைத்துப்
பினமாம் மலத்தினைப் பின்வைத்துப் பின்சுத்தத்
தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி
மனவாச கங்கெட்ட மன்னனை நாடே.

English Meaning:
Beyond Suddha Upasanta and Siva States

Merge the experiences five in Nada;
Drop the lowly Malas behind:
Then enter the Suddha State
Thus the onward course pursue;
Beyond the Upasanta State (Para Turiya)
Is the Siva State
Further beyond the reach of thought and word
Is the Lord Param-Param;
Do Him seek.
Tamil Meaning:
`அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம்` என்னும் பிரணவ கலைகள் ஐந்தையும் முறையே யோகாவத்தையில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் அவத்தைகளாகிய `பிரணாயமம், பிரத்தியாகாரம், தாரணை: தியானம், சமாதி` என்னும் ஐந்திலும் பொருந்த வைத்துப் பயின்றால், உன்னின் வேறாகாது உடனாய் ஒன்றி நின்ற ஆணவ மல சத்தி உன்னின் வோறாய்ப் பிரியும். அங்ஙனம் அது பிரியுமிடத்து நின்மலாவத்தையில் சாக்கிரம் முதலிய ஐந்திலும் மேற்சொல்லியவாறே அகாரம் முதலிய கலைகளை வைத்துப் பாவிக்க, ஆணவ சத்தி உன்னை மறைக்க மாட்டாது. கீழ்ப் பட்டு அடங்கும். அஃது அடங்கவே, ஆன்ம சுத்தி உண்டாகி, அதன் பின் ஆன்ம லாபமும் கிடைக்கும். இவ்வாறு சத்தாதி ஐம்புலன் களையும் உணரும் ஐம்பொறிகளையும், அவற்றின் வழி ஓடுகின்ற மனத்தையும், அதற்குமேல் வாக்கையும் கடந்த தலைவனாகிய சிவனை நீ உணர்வாயாக.
Special Remark:
``நாதாதி`` என்றது, எதிர் நிரல் நிறையாகக் கூறியது. ``வைத்து`` என்பதன்பின், `பாவிக்க` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. `பின்னமாம்`` என்பது இடைக்குறைந்து நின்றது. பின்ன மாதல், வேறாதல். `பின்னமாம் மலத்தை` என்ற அனுவாதத்தால் பின்னமாதல் பெறப்பட்டது. ``பின்`` என்றது முற்படாது அடங்கு -தலை. `பின்னாக வைத்து` என்க. `பின் சுத்தத்து ஆம்` என்றதனால், பின் சுத்தநிலை வாய்த்தல் பெறப்பட்டது. `சிவகதி தனது ஆம்` என மாறுக. சத்தாதி` ஆகுபெயர். சாந்தி - அடங்குதல். ``கெட்ட`` என்றது, `கடந்த` என்றபடி. `சாந்தியை உடைய, கெட்ட மன்னன்` என்க.
இதனால், பிரணவம் மேற்கூறியவாறு சொரூபானந்தத்தில் உய்க்குமாறு இது` என்பது கூறப்பட்டது.