ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்

பதிகங்கள்

Photo

வைத்த துரிய மதில்சொரூ பானந்தத்(து)
உய்த்த பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயந்து விட்டிடும் மெய்யுணர்
வைத்த படியே அடைந்துநின் றானே.

English Meaning:
Supreme Awareness Beyond Siva Turiya State

At the end of Siva Turiya State
Is the Bliss of Manifestness (Svarupa)
There chant within your heart
The Mantra that is Pranava (Aum)
Then appears Siva the Awareness Supreme.
Tamil Meaning:
`தத்துவமசி` என்னும் உபதேசத்தையேயன்றிப் பிரணவ உபதேசத்தை ஒருவன் தனது நிலையான உள்ளத்தில் அழுத்தி வைப்பினும் அதனால் விளையும் மெய்யுணர்வினால் அவன் தன்னை ஆசிரியர் ஆக்கி வைத்த சிவநிலையை இழக்காது அடைந்து நிற்பவனாவான்.
Special Remark:
`பிரணவம் மகாவாக்கியப் பயனைத் தரும்` என்றபடி. அது, மேல், ``வில்லின் விசை நாணில்``9என்னும் மந்திரத்தில் கூறப்பட்டது. பிரணவ கலைகளாகிய `அ, உ, ம்` என்பன முறையே தத், த்வம், அசி பதங்களாய் நிற்கும் என்க. பிரணவம் இவ்வாறு நின்று உயிரைச் சிவமாகச் செய்தலால், ``எல்லாப் பிராணிகளையும் பரமான்மாவினிடம் வணங்கச் செய்வது பிரணவம்``8 என, `பிரணவம்` என்னும் சொற்கு உறுப்புப் பொருள் கூறுவர்.
துரியம், முத்துரியம். `அது` என்னும் பகுதிப் பொருள் விகுதி பன்மை யொருமை மயக்கமாய் வந்தது. சொரூபானந்தம் - சிவானந்தம். உய்த்த பிரணவம் - முத்துரியத்திலும் முன்பு பலரைச் சொரூபானந்தத்தில் செலுத்திய பிரணவம். ``இதயம்`` என்றது ஆன்ம உணர்வை. `தெளிந்த உணர்வு` என்றற்கு, ``மெய்த்த இதயம்`` என்றார். விட்டிடல், மேல் ஏழாது அழுத்தி வைத்தல். ``விட்டிடும்`` என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டாய், ``மெய்யுணர்வு`` என்னும் காரியப் பெயர் கொண்டது. வைத்தலுக்கு எழுவாய் வருவிக்க. தெளிவு பற்றி எதிர்காலம் ``நின்றான்`` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், முன்னையதிகாரத்தில் சொல்லப்பட்ட பிரணவத் -தின் இயல்பு இவ்வதிகாரத்தால் இகந்துபடாமைக் காக்கப்பட்டது.