ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்

பதிகங்கள்

Photo

வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி உச்சி முதலவை யாய்நிற்கும்``
தாய்நாடி யாதிவாக் காதி கலாதிகள்
சேய்நா டொளியாச் சிவகதி ஐந்துமே.

English Meaning:
The Five Lights in the Body in Yoga

When from nose-tip to cranium the Prana breath
Through Mother Nadi (Sushumna) passes,
To the Five centers,
Uluva, nose-tip, eye-brow middle, fore-head and cranium,
Beyond the Primal Nada and Tattvas
Then glows as distant Divine Light;
That forsooth, these Siva States Five are.
Tamil Meaning:
மேல் வாயின்கண் உள்ள, நாசிக்குச் செல்லும் வழியிடம், (என்பது நாக்கின் அடிக்கு மேல் உள்ள இடம். இஃது `அண்ணம்` எனப்படும்.) புருவ நடு, நடு நெற்றி, உச்சித் தலை என்னும் நான்கும் சுழுமுனை வழியாகச் செல்லும் பிராணன் செல்லும் வழிகளில் சிறப்பானவையாகும். அவற்றிலும் புருவ நடுவும், உச்சியும் சிறப்பிற் சிறப்பானவை. சுழுமுனை நாடிக்கும் முலதாய் உள்ள மூலா தாரத்தில் உறங்கிக் கிடக்கின்ற, நால்வகை வாக்கிற்கும் முதலாகிய குண்டலி சத்தி எழுந்தோங்கிப் பிராணனுடன் மேற்சொல்லிய இரண் -டிடங்களை அடைந்து, அவற்றிற்கு அப்பால் உள்ள பொருளைக் காணும் ஒளியாக அமையுமாயின் அப்பொழுது, `கலை, காலம், நியதி, வித்தை, அராகம்` என்னும் ஐந்து தத்துவங்களும் சிவகதியை அடை வதற்குத் துணையாகிவிடும்.
Special Remark:
என்றது, `பசு கரணங்கள் பதி கரணங்களாகப் புருடன் சிவமாவான்` என்றடி. `நாசி இரண்டனுள் முன்னது நாசிக்குச் செல்லும் வழியையும், பின்னது நாசியின் அடிப்பாகத்தையும் உணர்த்தின. பிராசாத யோகத்தில், அகார உகார மகார விந்து நாத கலைகள் முறையே, `மூலாதாரம் முதல் இருதயம் வரையிலும், அப்பால் கண்டம் வரையிலும், அப்பால் அடி அண்ணம் வரையிலும், அப்பால் புருவ நடு வரையிலும், அப்பால் எவ்விடத்திலும் பரவி நிற்கும்` எனப் பிராசாத நூல்கள் கூறும். ஆகவே, `அகார உகார மகார கலைகளைக் கடந்த விந்து நாதங்களும் ஒருவனுக்கு இனிது விளங்குமாயின், அவன் துவாதசாந்தத்தில் விளங்கும் சிவனைத் தரிசித்துச் சிவம் ஆவான்` என்றற்கு இவ்வாறு கூறினார்.
தாய்நாடி - நடு நாடி; சுழுமுனை, `அதன் ஆதி` எனவும் `வாக்குகளின் ஆதி` எனவும் கொண்டு பொருள் உரைக்க. சேய் நாடு ஒளி - தொலைவில் காணத் தக்க ஒளி. தொலைவு, துவாதசாந்தம். `ஆக` என்பது கடைக் குறைந்து நின்று, ``சிவகதி`` என்பதன் பின் தொக்கு நின்ற `ஆம்` என்பதனோடு முடிந்தது. `ஒளியென` என்பதே பாடமாயினும் `ஒளி என்று ஆக` என்பதே பொருளாம். ``கலாதிகள்`` என்பதை ஈற் றடியில் கூட்டி, `கலாதிகள் ஐந்தும் சிவகதி ஆம்` என இயைத்து முடிக்க.
இதனால், `முன் மந்திரத்தில் கூறியவாறு சீவன் சிவன் ஆவதற்குப் பிராசாத யோகம் உறுதுணை யாகும்` என்பது கூறப்பட்டது.