ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்

பதிகங்கள்

Photo

உயிர்பரம் ஆக உயர்பர சீவன்
அரிய பரம்ஆக அச்சிவம் வேதத்
திரயிலும் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற ஓம்மயம் ஆமே.

English Meaning:
From Jiva to ``Aum``— Five Stages

Jiva becomes Para;
And that Para-Jiva becomes Siva;
And from that Vedic Lamp of Siva
Arose the light of Paraparan;
And in turn fills as Aum
That no speech could describe.
Tamil Meaning:
முன் மந்திரத்திற் கூறிய முறையால் சீவன் சிவமான பொழுது, அது `சீவான்மா` எனப்படாது, பரமான்மா` என்றே சொல்லப்படும். (இவ்வாறு சருவஞ்ஞானோத் தரத்தில் சொல்லப் பட்டது. என்பதைச் சிவஞான போத ஆறாம் சூத்திர மாபாடியத்தில் காண்க.) அங்ஙனம் சொல்லப்படுமாறு சீவன் சிவமேயாய் விட்ட பொழுது, அவ்வாறான அந்த ஆக்கச் சிவம், மூனறு வேதங்களிலும் பராபரம்` எனப் புகழ்தற்கு உரியது. சொல் இறந்ததும், பிரணவமே வடிவானதும் ஆன அந்தச் சிவமேயன்றி, வேறன்றாம்.
Special Remark:
பர சீவன் - பரமான்மா. `பர சீவனாய்` என ஆக்கம் வருவிக்க. `அரிய சிவம் ஆக ஆம்` என இயைத்து முடிக்க. `ஆக` என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டு. ஆக்கச்சிவத்தைக் குறிக்க, `அச்சிவம்` எனச் சுட்டினார். பின்னர்க் கூறியன எல்லாம் இயற்கைச் சிவத்தைக் குறித்து, `திரயத்திலும்` இடைக்குறைந்து நின்றது. திரயம் - மூன்று `இறுதி, வேதமாகிய அதர்வணம் ஏனை மூன்று வேதங் களுள் அடங்கும்` என்னும் கருத்தால், ``வேதம் த்ரயீ`` எனக் கூறும் வழக்கு உண்டு ஆதலின், ``வேதத்திரயத்தில்`` என்றார். ``என்ன`` என்பது, ``உரிய`` என்பதனோடு முடிந்தது. ``உரிய, உரையற்ற`` என்பன ``ஓம் மயம்`` என்பதனோடு முடிந்தன, ``மயம்`` என்றது, மயமான பொருளை. `சிவம் ஓங்காரமே` என்றல் வேத வழக்கு. ``ஓம்மயம் ஆமே`` எனறது உடம்போடு புணர்ந்தது. ஆகவே `ஓம்மயம் ஆனதும் ஆகும்` என முன்னர்க் கூறியவற்றோடு கூட்டி யுரைத்தல் கருத்தாயிற்று. `ஓம்மயமே ஆம்` எனப் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டி உரைக்க. இவ்வாறு வலியுறுத்திக் கூறியது, `முத்தியில் சீவான்மாவிற்கும், பரமான் -மாவிற்கும் இடையே தூலமூம், சூக்குமமும் ஆகிய வேறு பாடன்றிப் பிறிது வேற்றுமை யில்லை` என்பது உணர்த்துதற்கு, `சிவம், சூக்குமம்` என்பது உணர்த்துதற்கு அது, `பரம்` எனப் பட்டது. இம்மந்திரம் இரு விகற்ப எதுகையதாய் நின்றது.
இதனால், மகாவாக்கியங்களில் அனுபவ வாக்கியத்தால் உளதாகும் பயனது சிறப்புக் கூறப்பட்டது.