ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்

பதிகங்கள்

Photo

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரம்என்பர் ஆகார்இ தன்றென்னார்
உரிய பரம்பர மாம் ஒன் றுதிக்கும்
அருநிலம் என்பதை யார்அறி வாரே.

English Meaning:
Param-Param State Beyond Triple Turiya

The inexplicable Void that is at Turiya end
They call it Param, they who know not;
Nay, that is not so;
There is the Wondrous Land of Param-Param
That rises beyond (the Three Turiya States)
Who knows about that!
Tamil Meaning:
துரியத்தைக் கீழ்ப்படுத்தி நிற்கும். துரியாதீத நிலை, சுட்டுணர்வினால், உணரவும், சொல்லாற் சொல்லவும் வாராமையால் அந்நிலையை எய்தாதவர்க்கு அது வெறும் பாழ்போல்வதாகும். அதனால் அவர் அதில் விளங்கும் பொருளை, ஒருவராலும் அடைய இயலாத ஒரு தனிப் பொருள் என்று கூறுவர். அதனை வேறு சிலர், `அஃது இன்னது ஆம் - என்றும், இன்னது அன்று` என்றும் அநிர்வச னீயமாகக் கூறுவர் ஆயினும், `அந்தத் துரியாதீத நிலை அனுபவிக்கத் தக்க, மிக மேலான, ஒன்றேயான ஒப்பற்ற ஒரு பெரும் பொருள் விளங்குகின்ற நிலை` என்பதை அறிபவர் யார்!
Special Remark:
அந்நிலையையடைந்து, அப்பொருளைத் தலைப்பட் டுணரும் ஒரு சிலரே அறிவார் என்பது கருத்து. பாழ்போல்வதாதலை, ``பாழ்`` என்றார். `ஆகார் அரிய பரம் என்பர்` என மாற்றிக் கூட்டுக. `அவர் கூறுவது உண்மையாயின் அப்பொருளால் யாருக்கு, என்ன பயன்! ஒன்றுமில்லையாகையால் அவர் கூற்றுப் பிழையானது என்பது `அங்கு விளங்கும் பொருள் அனுபவப்படுவதே` என்பதும் கருத்துக்கள். ``என்னார்`` என்பதை முன்னும் கூட்டி, `இது என்னார்; அன்று என்னார்` என்க. பரம் பரம் - மேலானதற்கும் மேலானது, உதித்தல் - விளங்குதல்.
இதனால், ``வேதாந்த மகாவாக்கியங்களின் அனுபவம், `அறிவான், அறிவு, அறியப்படும் பொருள்` என்பன இல்லாது, வெறும் அறிவு மாத்திரையானதே`` என்றல் பொருந்தாது. பெறுவான், பெறப்படும் பொருள் என்பன உள்ளதாய்ப் பேரின்பமாவதே என்பது கூறப்பட்டது.