ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 38. வாய்மை

பதிகங்கள்

Photo

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருட் புகுதா ஒருவனைக்
கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற லாமே.

English Meaning:
Lord Abides In Hearts of the Truthful

He united in those
Who in Truth united,
He the Pure One
Who entered not false hearts;
When Prana upward ascends in Sushumna,
And you meet the Lord,
Then shall verily,
He in Your thoughts abide.
Tamil Meaning:
முன் மந்திரத்திற்கூறிய அத்தகைமையனாகிய சிவனை, ஆவி உடலைவிட்டு நீங்கும் காலத்தில் நினைத்தல், அதற்கு முன்னெல்லாம் இடைவிடாது நினைந்தவர்கட்கே கூடும்.
Special Remark:
`ஆதலின் அவ்வாறு இப்பொழுதே நினையுங்கள்` என்பது குறிப்பெச்சம். `உயிர்போங் காலத்து நினைத்தல் அரிது` என்பதை,
`` ... ... ... ... ... கடல்நாகைக்
காரோண, நின்
நாமம் பரவி, நமச்சிவா யவ்வெனும்
அஞ்செழுத்தைச்
சாம்அன் றுரைக்கத் தருதிகண்டாய்,
எங்கள் சங்கரனே`` 9
என்பதனாலும், `அவ்வாறு நினைந்தவழியே அவனை யடைதல் கூடும்` என்பதை,
``உன்னை நினைந்தே கழியும் என் ஆவி`` 3 என்பதனாலும் உணர்க. இறக்குங் காலத்தில் வினையின்வழி எந்த நினைவு உயிருக்கு உண்டாகின்றதோ, `அந்த நினைவின்படியே அஃது அடுத்த பிறப்பை அடையும்` என்பதை
``மரிக்கும்போ(து) உன்னும் வடிவமதை ஆவி
பரிக்கும் நினைவு பரித்து``
என்பதனாலும்,
``ஆதலினால் சுற்றத் தவரைநினை யா(து) அமலன்
பாதம் நினைக பரிந்து`` *
என்பதனாலும் அறிக.
மூன்றாம் அடியில், `கைகலந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `ஆவி கலந்திருத்தலும், எழுந்து போதலும் உடலிடத்து` என்பது வெளிப்படை. ``கருத்துறல்`` என்பதை ``எழும்போது`` என்பதன் பின்னர்க் கூட்டுக. பின்வந்த, `கைகலத்தல்` என்பது, எப்பொழுதும் இடைவிடாது கலத்தலைக் குறித்தது.
இதனால், உய்திவேண்டுவோர் தப்பாது செயற்பாலது இது` என்பது உணர்த்தப்பட்டது.