ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 38. வாய்மை

பதிகங்கள்

Photo

தானே உலகின் தலைவன் எனத்தகும்
தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே.

English Meaning:
Melt in Love of God

He will be Lord of worlds all,
He will be Tattvas for worlds all,
The heavens will rain because of him,
Whose flesh melts in love of God;
—Thus say the Vedas.
Tamil Meaning:
சிவபெருமான் ஒருவனே உலகங்கட்கெல்லாம் முழு முதல் தலைவனும், மெய்ப்பொருளும் ஆவன். அறம் முதலிய உறுதிப்பொருள்களை உணர்த்தும் மறைகளின் வழியே அவைகள் நிலைபெறற் பொருட்டு வானம் மழைபொழியவும் கருணை கூர்வன். இவற்றை உணர்ந்து ஊனும் உருகும்படி எந்த உள்ளம் அன்பினால் உருகுகின்றதோ அந்த உள்ளம் அவனோடு சேர்ந்து ஒன்றாகும்.
Special Remark:
இங்கு, ``தான்`` என்பன வடமொழி வழக்குப் பற்றிப் பொதுமையில் வாராது, தமிழ்வழக்கே பற்றி மேலெல்லாம் சிறப்பாக எடுத்து வலியுறுத்திப் போந்த சிவபெருமானை உணரச்சிறப்பாகவே வந்தது. `அல்லாக்கால், இம்மந்திரம் நின்று வற்றும்` என்க. `மாமறை வழி ஒழுக வானே மழை பொழியக் கூர்ந்திடும்` என ஒருசொல் வருவித்து இயைத்து முடிக்க. ``பொழி`` என்னும் முதனிலையே, `பொழிய` என வினையெச்சப் பொருள் தந்தது. ``வானே`` என்னும் பிரிநிலை ஏகாரம், ``வானின்றமையா தொழுக்கு``3 என்பதை விளக்கி நின்றது. `ஊனே` என்னும் தேற்றேகாரம், `உருகமாட்டாதது ஊன், அதுவும் உருகுதற்கு ஏதுவாய் நின்ற உள்ளம்` என்னும் பொருளைத்தோற்றுவித்தது. ``உருகிய`` என்னும் பெயரெச்சம், ``உள்ளம்`` என்னும் ஏதுப்பெயர் கொண்டது. அப்பெயர்விடாத ஆகுபெயராய் அதனையுடைய ஆன்மாவைக் குறித்தது. இனால், முன் மந்திரங்களில், ``இறை`` என்றும் ``எல்லாம் அறிந்த அறிவன்`` என்றும் கூறப்பட்ட முதல்வன் சிவபெருமானே என்பது கூறப்பட்டது.