ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 38. வாய்மை

பதிகங்கள்

Photo

எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டே
எல்லாம் அறிந்தும் இலாபம்அங்கில்லை
எல்லாம் அறியும் அறினை `நான்` என்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே.

English Meaning:
Knowledge That Knows All

What avails you
If you know all,
But not the Knowledge that knows all?
When you can say,
``I am the Knowledge that knows all``
Then can you well say,
``I am God.
Tamil Meaning:
உயிர்கள் இறைவனைத் தவிர மற்றை எல்லாப் பொருள்களையும் அறிதல் அவற்றிற்குப்பந்தமாகும், அதனைக் குருவருளால் நீங்கிச் சிவனைப்போல முற்றறிவைப் பெற்றபின்னும் இறைவனைத் தவிர வேறுபொருள்களை அறிவதில் பேறு ஒன்றும் இல்லை. (மாறாக, இன்ப இழப்பே உளதாகும், ஏனெனில், பிற எல்லாம் துன்பப் பொருள்களேயாதலின). ஆகவே `சிவன் நான்` என்னும் அந்த ஒற்றுமை உணர்விலே நிலைத்து நிற்பின், உயிர் இறை நிலையினின்றும் பிறழாதிருக்கும்.
Special Remark:
முதல் இரண்டடிகள் முறையே பாச நீக்கத்தையும், சிவப்பேற்றையும் குறித்தன. `சிவப்பேறு பெற்றும் பயனில்லை` என்றதனால், அதற்குரிய காரணம், ``எல்லாம்`` என்றதனால் குறிப்பால் பெறப்பட்டது. `இறையே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. `திருவருளைப் பெற்றபின்னும் அது கண்ணாக இறைவனையே உணர்ந்து அவனிடத்து அடங்கி நில்லாது, தற்போதத்தால் பிறவற்றை யுணர்தல் மீட்டும் பந்தமாம்` என்பதனை,
``பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்?
அக்கொழு நீ அறிந் துந்தீபற;
அறிந்தறி யாவண்ணம் உந்தீபற`` *
என்னும் திருவுந்தியாரால் அறிக. ``அறிந்து, அறியா வண்ணம்`` திருவருளாலே யறிந்து, தற்போதம் தலை யெடாதபடி நில்.
``எல்லாம் அறியும் அறிவுறினும், ஈங்கிவர் ஒன்(று)
அல்லா தறியார் அற`` *
என்றார் உமாபதிதேவர்.
இதனால், `உபதேச நிலையினின்றும் பிறழாது உறைத்து நின்ற வழியே பயன் உளதாம்; இல்லையேல் அஃது இழக்கப்படும்` என்பது கூறப்பட்டது.
[இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் ``தலைநின்ற தாழ்வரை மீது தவம் செய்து`` என்னும் மந்திரம் அடுத்த தந்திரத்து, `சொரூப உதயம்` என்னும் அதிகாரத்தில் வருவது].