ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 38. வாய்மை

பதிகங்கள்

Photo

அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
குற்றம் அறுத்தபொன் போலக் கனலிடை
அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.

English Meaning:
When Jiva Becomes Radiant

By holy instructions are impurities rid;
Jiva shines like gold in fire purified;
Having been of impurities rid,
If Jiva constant thinks of Siva,
Then he becomes a Radiant Flame,
That has passions burnt away.
Tamil Meaning:
உயிர்கள் அடையத் தகும் முடிவான பயனை கூறுமிடத்து, அது வேதாந்த சித்தாந்த மகாவாக்கியங்களின் ஒருமித்த பொருளேயாகும். அதுமேலே சொல்லப்பட்டது. அந்தப்பயன், இறைவன், உயிர்கள் பாச பந்தங்களினின்றும் முற்றாக நீங்கத் திருவுளம் பற்றி, தான் அந்தப் பந்தங்களை நீக்கும் செயல்களைக் குறைவின்றிச் செய்தால் தீயில் இட்டு மாசுக்களை நீக்க நீங்கிய பொன்போல உயிர்கள் தன்னைச் சூழ்ந்துள்ள இருளை ஓட்டி ஒளிவிடுகின்ற விளக்குப்போல ஆகி, பந்தங்கள் அனைத்தையும் துரத்தி விளங்கும்.
Special Remark:
அற்றது - முடிந்த பயன். இதன்பின், `அது` என்னும் எழுவாய் வருவிக்க. ``கனலிடை`` என்பதை அவ்வடியின் முதலிற் கூட்டி, அவ்வடியை ஈற்றுக்கு அயலிற் கூட்டுக`. ``இறை`` என்பதையும் அவ்வடியின் முதலிற் கூட்டுக. ``அற்று அற`` என்னும் ஒரு பொருட் பன்மொழி, `முற்றாக` எனப்பொருள் தந்தது ``அற`` , என்றதும், `முற்ற` என்றபடி. `திருவுளம் வைத்து` என்க. மாற்று - மாற்றுச் செயல்; பரிகாரம் ``ஆகும்`` என்பதற்கும், `உயிர்` என்னும் எழுவாய் வருவிக்க. ஆக்கம், உவமை குறித்து நின்றது.
இதனால், ஒருமொழி மகாவாக்கியங்களே உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் கரையேற்றுகின்ற புணையாகும்` என்பதும், (அம்மகா வாக்கியங்களில் தலையாயது திருவைந்தெழுத்து` என்பதே சித்தாந்தம். ``அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை`` (திரு வாசகம் - திருச்சதகம் - 27) எனவும், ``இருவினைப்பாசம் மும்மலக் கல் ஆர்த்திட - வருபவக் கடலில் வீழ் மாக்கள் ஏறிட - அருளும்மெய் அஞ்செழுத்து`` (பெரிய புராணம் - அப்பர் - 129.) எனவும் போந்த திருமொழிகளைக் காண்க). `அதுவும் இறைவனது அருளால் உரிய காலத்தில் பெறத்தக்கது` என்பதும் கூறப்பட்டன.