ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 38. வாய்மை

பதிகங்கள்

Photo

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.

English Meaning:
The Truthful Are Beloved of God

Into them that are Truthful
He in Truth merged;
Before them that are untruthful
He never His appearance makes;
At time`s End He stands as Lord,
To work redemption of souls all;
True ones sport in True Joy.
Tamil Meaning:
எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவுபவன் சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறற்பொருட்டு பெறற்பொருட்டு அவனையே சார்தலால், அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்து, நிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன்.
Special Remark:
``மெய், பொய்`` என்ற பொதுமைகள், உலகியல் அருளியல் இரண்டிலும் உள்ள வாய்மை பொய்மைகளை உணர்த்திநின்றன. அதனால் உலகியலிலும் பொய்யைப் பற்று கின்றவர்களைச் சிவன் வெறுத்தல் விளங்கிற்று. ``கரவாடும் வன் னெஞ்சர்க்கு அரியானை``, 3 `கரப்பவர் தங்கட்கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்`` l ``வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழிகொடார் - நஞ்சநெஞ்சர்க் கருளும் நள்ளாறரே`` 9(நஞ்ச - நைந்த; உருகிய) என அப்பர் கடிந்தோதியருளிய திருமொழிகளைக் காண்க. கரத்தல் - உள்ளதை `இல்லை` என மறைத்துக் கூறுதல். அது பொய்ம்மையே யாதல் அறிக.
``நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன்;
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும்கண்டு,
நக்கு நிற்பன் அவர்தம்மை நாணியே``*
என அவர் அருளியல் பற்றிச் சிறப்பாக ஓதியருளினமையும்,
``யானே பொய்; என் நெஞ்சும் பொய்; என்
அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப்
பெறலாமே. 8
என ஆளுடைய அடிகளும் அவ்வாறே அருளிச் செய்தமையும் உணரற்பாலன. மெய்கலந்தான் - நேரே விளங்கிக் கலந்தான். ஏனையோர்பால் விளங்காதே கலந்திருப்பான் என்க. இரண்டன் உருபுகள் ``உய்கலந்து`` என்பதில் கலத்தலோடு முடிந்தன.
உய்கலந்து - உய்யக்கலத்தலால். கலப்பவர் மெய்யர். கலத்தல், உணர்வால் ஒன்றுதல். `மெய்யர்க்கே`` என்பதை இதன்பின் கூட்டுக. `மெய் கலந்த` என்பதில் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. மெய் - நிலைபேறு.