ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை

பதிகங்கள்

Photo

மாமதி ஆம்மதியாய் நின்ற மாதவர்
தூமதி யாகும் சுடர்பர மானந்தம்
தாமதி யாகச் சகம்உணச் சாந்திபுக்(கு)
ஆம்மலம் அற்றார் அமைதிபெற் றாரே.

English Meaning:
State of Quiescence

Of Wisdom infinite,
The Tapasvins great in wisdom stood,
Pure as moon`s rays they beam;
In Transcendental bliss they are;
Themselves Divine Jnana becoming,
They encompassed in Consciousness
The Universe Cosmic;
And entering Upasanta
They freed themselves of Malas,
And State of Quiescence reached.
Tamil Meaning:
`மதி` என்பதற்கு, `அறிவு` என்பதும் பொருள் ஆதலால் `மதி` என்னும் பெயருக்கு வானத்துச் சந்திரனை விட மிக உரிமையுடைய உச்சிச் சந்திரனை அடைந்து, அதனால் உண்டாகும் அறிவையே அறிவாகப் பெற்ற யோகிகளுடைய தூய அறிவாய் விளங்கும் ஒளி, பேரின்பமே வடிவாக உடைய பரம்பொருளாம். அதனால், பிறரெல்லாம் தங்களுடைய நிலையற்ற அறிவையே அறிவாகப் பற்றி உலகத்தை நுகர்ந்துகொண்டிருக்க இவ்யோகிகள் `உபசாந்தம்` என்னும் நிலையை அடைந்து, அநாதியே பற்றிய மலங்கள் நீங்கப்பெற்று, அமைதி நிலையை அடைகின்றனர்.
Special Remark:
`மாதவரது தூய்மதி` என்க. பரமானந்த வடிவானதை, ``பரமானந்தம்`` என்றார். தாமதி - தாவுகின்ற மதி. ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றும் நிலையில்லாத அறிவு. அற்றார். முற்றெச்சம். தெளிவு பற்றி நிகழ்காலம், இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.
இதனால், முன் மந்திரத்தில் கூறப்பட்ட யோகத்தின் சிறப்புடைப் பயன் கூறப்பட்டது.