ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை

பதிகங்கள்

Photo

நுண்ணறி வாய் உல காய் உல கேழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்றன்னைப்
பண்ணறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்ணறி வாளர் விரும்புகின் றாரே.

English Meaning:
He is Pervasive Knowledge

My Father, My Lord
As subtle Knowledge He stood;
As pervasive Knowledge, engrossing
The Seven Worlds, too, He stood;
He knows melodies all;
Sing His praise,
The Celestials will you in endearment hold.
Tamil Meaning:
உயிர்கள் தூல சித்தாதல் போல இல்லாமல் சூக்கும சித்தாய், சடவுலகத்தை இயக்கியும், அறிவுலகமாகிய உயிர்களின் அறிவுக்கறிவாய் நின்று அறிவித்தும் நிற்கின்ற, எங்கள் தந்தையாகிய சிவபெருமான், உயிர்களின் தனித் தன்மையை உணர்ந்து அவற்றைப் பக்குவப்படுத்தும் முறைகளில் பக்குவப்படுத்துவோனாவான். அவனை உணர்ந்த பெருமக்களையே உயர்ந்த அறிவினையுடையோர் சேரவிரும்புகின்றார்கள்.
Special Remark:
பின் ``என் அறிவாய்`` என்றமையால் முன்பு ``உலகு`` என்றது சட உலகத்தையாயிற்று. பண்ணுதல் தகுதி யாக்கல். ``ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவில்லை``* என்பதனால், சிவன் பண்ணறிவாளன் ஆதலையறிக. ``விண்`` என்பது உயர்வைக் குறித்தது. அறிவின் மிக்கோராதல் பற்றித் தேவர்கள், `புலவர்` என்றும், `விபுதர்` என்றும் சொல்லப்படுவார்கள். ஆதலின் அவர்களையே ``விண்ணறிவாளர்`` எனக் கூறினார் எனவும், இனி `விண்ணாவது சிவபோகம்; அறிவாளர் அங்குள்ள சிவஞானிகள் எனவும் கொள்ளலும் ஆகும். விண்ணறிவாளர் விரும்புதற்குக் காரணமானவற்றையே முதலில் உடம்பொடு புணர்த்தலாகக் கூறினார். ``விண்ணறிவாளர் விரும்புகின்றார்`` என்றதனால், `நீவிரும் அவ்வாறு விரும்புதலே தக்கது` என்பது குறிப்பாயிற்று.
இதனால், `அறிவு வடிவான மெய்ப்பொருள் சிவனே` என்பது கூறப்பட்டது.