ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை

பதிகங்கள்

Photo

கருந்தாட் கருடன் விசும்பூ டிறப்பக்
கருந்தாழ் கயத்தில் கரும்பாம்பு நீங்கப்
பெருந்தன்மை பேசுதி ஒழி நெஞ்சே
அருந்தா அலைகடல் ஆறுசென் றாறே.

English Meaning:
Lord is Remote and Near

The black-footed Garuda bird
Across the sky passes;
The black-hued serpent in deep well dies;
Stop bragging of your greatness, O heart!
Be like the river
That into the wavy ocean merges.
Tamil Meaning:
மனமே, `பெரிய முயற்சியையுடைய கருடன் தன்போக்கிலே தான் ஆகாயத்தில் பறக்கவும், கரிய நாகம் அஞ்சி ஓடி, மிக ஆழ்ந்த புற்றுள் ஒளிந்து கொள்ளுதல் போலவதே, மெய்யுணர் வுடையார் முன் மெய்யுணர்வில்லாதாரது நிலை என்பதைச் சில சான்று களால் நீ உணர்ந்திருந்தும் மெய்யுணர்வில்லாதாரது கூற்றுக்களைப் பெரிது படுத்திப் பேசுகின்றாய். இனி அவ்வாறு பேசுதலை விடு. ஏனெனில் உண்மை மெய்ந்நெறியாகிய பெருநெறியில் ஏனைச் சிறுநெறிகள் எல்லாம் பெரிய ஒரு கடலிலே சிறிய பல ஆறுகள் சென்று உருத்தெரியாது அடங்குதல் போல்வதே.
Special Remark:
``கருமை`` இரண்டும் பெருமை; ஏனையது நிறம் ``நீங்க`` என்பது `மறைய` என்றபடி, அது, `மறைதல் போல்வதாக` பொருள் தந்தது. `பெருந்தன்மை பட` என ஒருசொல் வருவிக்க. பெரிது படுத்திப் பேசுதலாவது, `அவைகளும் ஏன் உண்மைகளாய் இருக்கக் கூடாது` என எண்ணி மயங்குதல். `சென்ற` என்பதன் ஈற்றகரம் தொகுத்தலாயிற்று. ``சென்ற`` என்றது சென்று அடங்குதலைக் குறித்தது. ``ஆறு`` இரண்டில் முன்னது நதி. பின்னது உவம உருபு. `ஆறாதலையுடையவே` என ஈற்றில் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. பிறர் நெஞ்சின் இயல்பினைத் தம் நெஞ்சின்மேல் ஏற்றியுரைத்தார்.
இதனால், `புறங் கூற்று மொழிகள் மயக்கும் தன்மையுடைய வாயினும் குரு உபதேசத்தில் உறைத்து நின்று மயங்கலாகாது` என்பது கூறப்பட்டது. `பிற நெறிகள் குற்றம் உடையன ஆகாது, குறை மட்டுமே உடையன` என்பது பின்னர்க் கூறிய உவமையால் பெறப்படுதல் காண்க.