ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை

பதிகங்கள்

Photo

விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக்
கண்ணற உள்ளே கருதிடில் காலையே
எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர்
பண்ணிடில் தன்மை பராபர னாகுமே.

English Meaning:
Think of Him Continuously

He whom even Celestials know not,
Think of Him, in the waking dawn,
Continuously think of Him morn, moon and eventide
If thus you persevere,
You shall become the very Paraparam.
Tamil Meaning:
தேவர்களாலும், (உம்மையால் மூவர்களாலும்) அறிதற்கரியவனாகிய சிவனைச் சிறுதும் இடையீடின்றி உள்ளத்தால் பற்றுங்கள்; பற்றினால் பற்றிய அப்பொழுதே அவன் உங்களால் விரும்பப்படும் பொருளாய் வெளிப்பட்டு விளங்குவான். அதன் பின்பு எஞ்ஞான்றும் நீவிர் அவனை அகத்தும், புறத்தும் வழிபட்டால், உமது தன்மை சிவத்தன்மையாய்விடும்.
Special Remark:
கண் - காலம் பற்றிய இடைவெளி. காலை - காலம் `அக்காலையே` எனச் சுட்டு வருவித்து உரைக்க. இயற்றுதல், பண்ணுதல் என இருகாற் கூறியது அகம், புறம் நோக்கியாம். `உம் தன்மை` என எடுத்துரைக்க. ``பராபரன்`` என்பது, அவனது தன்மையைக் குறித்த ஆகுபெயர்.
இதனால், சிவன் சாராதார்க்கு அரியனாயினும் சார்ந்தார்க்கு எளியன் ஆதலை உணர்த்தி, `அவனைச் சார்ந்து பயன் அடைக` என்பது கூறப்பட்டது.