ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை

பதிகங்கள்

Photo

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை
ஒன்றும் பொருள்கள் உரைப்பவ ராகிலும்
வென்றைம் புலனும் விரைந்து பிணக்கறுத்(து)
ஒன்றா உணரும் ஒருவனும் ஆமே.

English Meaning:
Adore Him in All Ways

Standing, sitting and prostrating
Well may you, the Pure One adore;
Though learned you be
Do conquer your Senses Five,
And quick sunder contending Pasas;
Thus seek Him and know Him,
He in you one will be.
Tamil Meaning:
நூல்களில் சொல்லப்பட்ட பொருள்களைப் பிறர் அறிய நன்கு உரைப்பவராயினும், தாங்கள் ஐம்புலன்களை வென்று, `இவன் பரமோ, அவன் பரமோ, எல்லாருமே பரமோ` என இங்ஙனம் பலவாறாக எண்ணி அலமரும் ஐயங்களை விரைவில் விடுத்து, `இவன் ஒருவனே பரம்` என்று ஒருதலையாக உணரத்தக்கவன் ஒரு முதல்வனே. அத்தகைய முதல்வன் எங்கள் பரமாகிய சிவன் ஒருவனே ஆதலின், அவனையே நீவிர் நிற்றல், இருத்தல், கிடத்தல் முதலிய எத்தொழிலைச் செய்யினும் மனத்தால் ஒன்றியிருங்கள்; பயன் அடைவீர்கள்.
Special Remark:
`பொருள்கள் உரைப்பவராயினும்` என்பது முதலாகத் தொடங்கி, ஈற்றில், `ஆதலின்` என்பது வருவித்து. `எம் நிமலனை நின்றும் ஒன்றும் என முடிக்க. மேல் ``எம் ஈசனை`` என்றும், ``என் உயிர்`` என்றும் கூறினாற்போல, இங்கும் `எம் நிமலனை` என்பதில் `எம்` என்பது தொகுத்தலாயிற்று.
``ஒன்றே குலமும்; ஒருவனே தேவனும்``*
எனவும்,
``சிவனோ டொக்கும் தெய்வம் தேடினும் இல்லை:
அவனோடொப்பார் இங்கு யாவரும் இல்லை``*
எனவும் மேற்கூறியவற்றையே இங்கு வலியுறுத்து ஓதினார்.
இதனால், ஐயக் கொள்கை ஆகாமை கூறப்பட்டது.
``ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து``*
எனத் திருவள்ளுவரும் கூறினார்.