ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 30. புறங்கூறாமை

பதிகங்கள்

Photo

என்னிலும் என்உயி ராய இறைவனை
பொன்னிலும் மாமணி யாய புனிதனை
மின்னிய வெவ்வுயி ராய விகிர்தனை
உன்னில் உம் உன்னும் உறும்வகை யாலே.

English Meaning:
Contemplate on Him

The Lord who is dearer than dearest life in me,
The Pure One who is brighter than purest gold
The Great One, in all life, unvarying glows,
On Him contemplate, in ways appropriate.
Tamil Meaning:
என்னைத்தான் நான், `என் உய ர்` என்று ஓற்றுமைக் கிழமை பற்றி எண்ணுவேன். ஆயினும், என் உயிரினுள் உயிராய் நின்று எனக்கு உறுதிசெதய்து வருபவன் எங்கள் இறைவனாகிய சிவன். ஆகவே, `என் உயிர்` என்று யான் வலியுறுத்திக் கூறுதற்கு உண்மையில் உரியவன் அவனே. அவன் உண்மையில் பொன்னினும், மணியினும் சிறப்பாகக் கொண்டு போற்றத்தக்கவன். தூய்மையே வடிவானவன் உலகில் காணப்படும் பொருள்களில் எல்லாம் மேலான ஒளிப்பொருளாகிய. பகலவன் ``வெங்கதிர்`` என்று சொல்லப்படுதல் போல, உயிரினுள் உயிராய் இருந்து அங்குள்ள இருளை முற்றக் கடிதலால் அவனை `வெவ்வுயிர்` என்றலும் பொருந்தும் (`வெம்மை` என்பதற்கு, `விருப்பம்` என்பதும் பொருளாகலின், ``வெவ்வுயிர்`` என்பது, `விரும்பத் தக்க உயிர்` என்றும் பொருள் தரும்) அவன் உயிர்களின் குணங்கட்கு வேறான குணங்களையுடையவன். அவனை நீவிர் நினைப்பீராயின், உம்மையும் அவன் நினைப்பான். (அவனை நீவிர் அடைதல் கூடும்)
Special Remark:
``என்னில் ஆரும் எனக்கினி யார் இலை
என்னி லும் இனி யான்ஒரு வன்உளன்;
என்னு ளே உயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்(கு)
என்னு ளேநிற்கும் இன்னம்பர் ஈசனே``3
என்னும் அப்பர் திருமொழியையும் காண்க.
``என்னிலும் என் உயிராய இறைவன்`` என்றது, `என் உயிர்` என்று யான் சிறப்பித்துக் கூறுதற்கு என்னிலும் மிக உரிமையுடைய இறைவன், என்றபடி, ``மணியிலும்`` எனப் பின்னரும் உருபு விரிக்க. ஆய - உயர்ந்த, மின்னிய - ஒளி விடுகின்ற. விகிர்தன் - வேறு பட்டவன். `உம்மை உன்னும்` என்பதில் இரண்டன் உருபு தொகுத்த லாயிற்று. உறும் வகையாலே உன்னும்` என முன்னர்க் கூட்டி முடிக்க.
இதனால் முன் மந்திரத்தில், ``எம் ஈசனே ஈசன்`` என்று உயர்ந்தோர் பலரும் உன்னி வந்து வணங்குவர் என்றதற்குக் காரணம் கூறப்பட்டது.