ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்

பதிகங்கள்

Photo

மேருவி னோடே விரிகதிர் மண்டிலம்
ஆர நினையும் அருந்தவ யோகிக்குச்
சீர்தவம் செய்யின் சிவனருள் தானாகும்
பேரவும் வேண்டா பிறிதில்லை தானே.

English Meaning:
Contemplate in Yogic Way

To the Yogis of intense Tapas,
Contemplating on Mystic Meru Mount
In the radiant Sphere within,
In their rare Tapas
Siva`s Grace, of itself, appears;
Move not from this way;
There is none other too.
Tamil Meaning:
இடைகலை பிங்கலைகளை, `சந்திர சூரியர் வழி` எனக் கூறுதலால், அவ்வழியாக இயங்கும் பிராண வாயும் வலம் வரும் சுழுமுனை நாடியை, `மகாமேரு` என்றலும், அந்தச் சுழுமுனை நாடியின் நடுப் பாகமாகிய அநாகத விசுத்தி ஆதாரங்களை, `சூரிய மண்டலம்` என்றலும் யோக நூல் வழக்கு. அனாகதமாகிய இருதயம் பூசைத் தானமாகக் கொள்ளப்படும். அதனால், சுழுமுனை வழியாகச் சென்று இருதயத்தில் சிவபெருமானை நன்றாக நினைந்து வழிபடு பவனை, `மேருவினோடே சென்று விரிகதிர் மண்டிலத்தில் (சிவனை) ஆரநினையும் அருந்தவயோகி` (`சென்று`) என ஒரு சொல் வருவித்து, `விரிகதிர் மண்டிலத்தில்` என உருபு விரித்து கொள்க.) ``செய்யின்`` என்பது `செய்வதனால்` எனப் பொருள்தந்து நின்றது. ஆகவே, `அந்த அருந்தவ யோகிக்குச் சிவனருள் தானாகவே கிடைக்கும்` என்றும், `அவன் கைக்கொள்ள வேண்டிய சாதனம் வேறொன்றும் இல்லை யாகையால் அந்நெறியைவிட்டு அவன் விலகுதல் வேண்டா` என்றும் கூறினார்.
Special Remark:
இதனால், `இங்குக் கூறப்பட்ட இலக்கணங்களையுடைய பரம்பொருளை அடைதற்கு யோகம் சிறந்த சாதனம்` எனக் கூறி முடிக்கப்பட்டது.