ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்

பதிகங்கள்

Photo

பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு
நிரந்த வெளியொடு ஞாயிறு திங்கள்
அரந்தம் அரன்நெறி யாய் அவை யாகித்
தரந்த விசும்பொன்று தாங்கிநின் றானே.

English Meaning:
Siva`s Immanence and Transcendence

Expanding and contracting,
Earth, water, space and wind,
Sun and Moon,
Pervasive and immaent,
Hara stood;
Supporting the firmament vast.
Tamil Meaning:
சிவன்,
``நிலம், நீர், நெருப்பு, உயிர், நீள் விசும்பு, நிலாப், பகலோன்,
புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான்``3
எனவும்,
``இருநிலனாய்த், தீயாகி, நீரு மாகி,
இயமான னாய், எறியும் காற்றா மாகி,
அருநிலைய திங்களாய், ஞாயி றாகி,
ஆகாச மாய் அட்ட மூர்த்தி யாகி
... ... ... எம்மடிகள் நின்ற வாறே``l
எனவும் அருளிச் செய்தவாறு, ஐம்பெரும்பூதங்களும், `ஞாயிறு` திங்கள், என்னும் இரு சுடர்களும், ஆன்மாவும் ஆகிய எட்டினையும் தனக்குத் திருமேனியாகும்படி அவைகளில் வேறின்றிக் கலந்து நிற்கின்றான்.
Special Remark:
`அஃதறிந்து அவனைப் போற்றி உய்தல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். `பரந்தும் சுருங்கியும் நின்றான்` என இயையும். பரத்தல், பெரியதிற் பெரியனாய் அளவின்றி விரிந்து நிற்றல். சுருங்கல், சிறியதிற் சிறியனாய் நுணுகி எல்லாப் பொருளிலும் நிறைந்து நிற்றல்.
``அணோரணீயாந் ஹதோ மஹீயாந்``
என உபநிடதம் கூறும்.l செய்யுள் நோக்கி, எட்டுப்பொருள்களையும் முறை பிறழ வைத்தார். நிரந்த - எங்கும் நிறைந்த அரத்தம் - சிவப்பு. அது பண்பாகு பெயராய், அந்நிறத்தையுடைய தீயைக் குறித்தது. `அரத்தம், தரத்த` என்பன எதுகை நோக்கி மெலிந்து நின்றன. தரம் - ஏனை ஏழிற்கும் மேலான வியாபகம். அங்ஙனமான தன்மையுடைமை பற்றி ஆன்மாவை உவமையாகுபெயரால் ``விசும்பு`` என்றார். ``அரன்`` என்பதை முதலிற் கொள்க. நெறியாய் - முறையாக. தாங்கி நிற்றல். அவற்றினுள் நிறைந்து அவற்றை நிலைத்திருக்கச் செய்தல், அரன், பார் முதலியவற்றுள் முறையாய் அவையாகி, விசும்பு ஒன்றைத் தாங்கி நின்றான்` எனவினை முடிக்க. சிவனுக்கு ஆன்மாவோடே நேர்த்தொடர்பு. பின்பு அதுவழியாகவே ஏனையவற்றோடு தொடர்பு. அது பற்றியே, விசும்பு ஒன்றையே சிவன் தாங்கி நிற்பதாகக் கூறினார்.
இதனால், பரம்பொருள் அட்ட மூர்த்தமாய் நிற்றல் கூறப்பட்டது.