ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்

பதிகங்கள்

Photo

வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற(து)
அளியா கியதற் பரங்காண் அவன்றான்
வெளி கால் கனல் அப்பு மேவுமண் நின்ற
வெளியாய சத்தி அவன்வடி வாமே.

English Meaning:
Pervasive Sakti is Pervasive Siva`s Form

Space, air, fire, water and earth
He pervasive fills
He is Tat-Para of love infinite;
Sakti that is manifested
In space, air, fire, water, and earth
Is but of His Form Divine.
Tamil Meaning:
`மாயா காரியமாகிய உலகப்பொருள் அனைத்திலுமே பரமசிவன் அருள் காரணமாக நிறைந்திருக்கின்றான்` என வேதாகமங்கள் கூறும். அவ்வாறு கூறுவதற்கும், `அவனது சத்தியே அவ்வாறு நிறைந்துள்ளது` என்பதே கருத்து. பூதாகாயம் ஏனைப் பூதங்களில் எல்லாம் நிறைந்திருத்தல் போல அனைத்துலகங் களிலும் நிறைந்திருத்தல் பற்றி அச்சத்தி, `பரவெளி - பராகாயம்` எனக் கூறப்படுகின்றது. அந்தச்சத்தியே, உண்மையில் பரமனுக்கு திருமேனியாகும்.
Special Remark:
அனைவரும் ஆறந்த ஐம்பூதங்களைக் கூறும் முகத்தால் உலகப்பொருள் அனைத்தையும் கொள்ளவைத்தற்கு அவற்றைத் தோற்ற முறையில் வைத்து எண்ணிக் காட்டினார். `நின்றது பரம்` என இயையும். ``அளியாகியபரம்`` என்றது உடம்பொடு புணர்ந்தது. காண், முன்னிலையசை ``அவன்றான் சத்தி`` என்றது, `சத்தி அவனின் வேறானதன்று`` என்றதாம். `பரம் பொருள் தன்னிலையில் தான் நிற்கும் பொழுது சிவம் என்றும், உலகத்தோடு ஒன்றாய், வேறாய், உடனாய்த் தொடர்பு பட்டு நிற்கும் பொழுது சத்தி என்றும், ஐந்தொழில் செய்யும் பொழுது பதி என்றும் பெயர்பெறும்` என்னும் ஆகமப்பொருளை யுணர்த்துவார். `வெளி, கால் ... ... ... நின்ற வெளியாய சத்தி` என்றார்.
இதனால், முன் மந்திரத்தில், `பரவான் உடல் - என்றல் உபசாரமாயின், உண்மை யாது` என்றெழுந்த அவாய்நிலை நிரப்பப்பட்டது.