ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்

பதிகங்கள்

Photo

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன்இவன் ஆமே.

English Meaning:
Knower becomes the Known

He and he knows Him not;
If he knows Him, then Knower is he not;
If he knows Him
Then he the Knower and He the Known
Become but one.
Tamil Meaning:
உயிர்க்கு உறுதியறியாமை பற்றி மெய்ந்நெறி யாளனால் `அவன்` என அயலவனாகக் குறிக்கப்படுபவனும், தன்போன்றாரால் அடையலாகாத மேல் நிலையை அடைந்தமை பற்றி உலகியலாளனால் `அவன்` என உயர்த்துக் கூறப்படும் மெய்ந்நெறி யாளனும் ஆகிய இருவருமே சிவனை அறிந்திலர், அஃது எவ்வா றெனில், சிவனை ஆன்மா உண்மையாகவே அறிவுமாயின் அதன் அறிவில், அறிபவனும், (உம்மையால் அறியும் அறிவும்) இல்லை யாகும். (மேற்கூறிய இருவர் அறிவிலும் அறிபவராகிய தம்மை அறியும் `யான்` என்னும், தமது அறிவை அறிகின்ற `எனது` என்னும் அறிவும் இருத்தலால் அவர் சிவனை அறிந்தாராதல் எங்ஙனம்?) அவ் விருவரும் `யான், எனது` என்பன முற்றும் அறும்படி சிவனை அறிந்தா ராயின் அவருள் ஒவ்வொருவனும் ஒவ்வொருகாரணம் பற்றி மற்ற வனை, `அவன்` என வேற்று நிலையில் வைத்து எண்ணும் நிலைநீங்கி, `இவன்` என ஒருநிலையில் வைத்து எண்ணும் நிலை உண்டாய்விடும்.
Special Remark:
``அவனை`` என இரண்டன் உருபேற்று நின்றவை மூன்றும் பண்டறி சுட்டாய்ச் சிவனைக் குறித்து நின்றன. ஏனையவை, `அவன்` என்று சுட்டப்படுபவன் எனப்பொருள் தந்தன. ``அவனும், அவனும்`` என இருவரைக் கூறி, `அவர் இருவரும் சிவனை அறியார்` என்றமையால் `அவர் இருவரும் வேறு வேறு நிலையினர்` என்பதும், `ஆயினும் அவர் அறியாராயினமைக்குக் காரணம் ஒன்றே என்பதும் போந்தன ஆதலின், `அவ்இருநிலை` இவை என்பதும், `ஒன்றாகிய காரணம் இது` என்பதும் ஆற்றலால் கொள்ளப்பட்டன.
`உலகியலான் சிவனை அறியான் - என்பது வெளிப்படை; ஆயினும் மெய்ந்நெறியாளன் சிவனை அறியானாதல் எவ்வாறு என வியக்கத் தோன்றும், அங்ஙனம் வியப்புத் தோன்றக் கூறியது சொல் நயமாகும். முத்தி நிலையிலும் சாக்கிரம் முதலிய அஞ்சவத்தைகள் உள; அவற்றுள் துரியம், துரியாதீதம் என்பவையே சிறந்தவை. அவற்றுள் துரியாதீதமே முடிநிலை. அதன்கண் அறிவானும், அவனது அறிவும் உணரப்படாமல் அறியப்படும். பொருள் ஒன்றே உணரப் படும். அவ்வாறன்றி, மூன்று பொருள்களும் உணரப்படுதல் துரிய நிலையேயாதல் பற்றி, அந்நிலையில் நின்றானையும் சிவனை யறியாதவனாகக் கூறினார். துரிய நிலை அருள் விளக்க நிலையும், துரியாதீதநிலை ஆனந்த விளக்கமும் ஆதல் அறிக. இம்மந்திரத்திலும் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது.
இதனால் ஞானத்தின் பயனாகிய முத்தியின் முடிநிலை இயல்பு கூறப்பட்டது.