ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்

பதிகங்கள்

Photo

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற விந்துப் பிணக்கறுத் தெல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்ட டேனே.

English Meaning:
Siva Extricates Jiva from Maya

He is the Lord of all life existent,
His true nature they know not,
He extricated me from Maya that separates,
Lo! then I beheld the Lord that is seed of all.
Tamil Meaning:
உலகத்தார் உலக உணர்வைத் தருகின்ற நாதத்தின் புறப்போக்கினை நீக்கமாட்டாமையால் தன்னால் தாங்கப்படுகின்ற அனைத்துயிர்கட்கும் தலைவனாய் அவற்றின் உள்ளும் புறம்புமாய் உள்ள இறைவனது இருப்பையும், அவனது பெருந்தன்மையையும் சிறிதும் உணராது அல்லற்படுவர். யான் அவன் வந்து உண்மையை உணர்ந்தமையால் அந்த நாதத்தின் மாறுபாடாகிய புறநோக்கைப் போக்கி அவனது அருளையே கண்ணாகக் கொண்டு காணும் அக நோக்கினை எய்தினமையால் அவனது இருப்பையும், இயல்பையும் நன்கு உணர்ந்து கொண்டேன்.
Special Remark:
`இஃதே ஞானமாவது` என்பதாம். ஞானத்தினது இயல்பு இனிது விளங்குதற் பொருட்டு அஞ்ஞானத்தினது இயல்பை யும் உடன் எடுத்து ஓதினார். வருவித்துரைத்தன இசையெச்சங்கள்.
விந்து - சுத்த மாயை. அதுவே நாதமாய் நின்று புறப்பொருள் உணர்வைத் தருதல் பற்றி, ``பிரிக்கின்ற விந்துப் பிணக்கு`` என்றார். அகநோக்கால் சிவனைச் சார்தலும், புறநோக்கால் அவனின் நீங்கி உலகைச் சார்தலும் உயிர்க்கு உளவாதல் பற்றி, ``பிரிக்கின்ற விந்து`` என்றார். `விந்துவால் விளையும் ஞானம் பாசஞானம் என்பதையும், `அந்த ஞானம் பதிஞானத்திற்குத் தடையாய் நிற்கும்` என்பதையும்,
``வேதசாத் திரமிருதி புராணகலை ஞானம்
விரும்பசபை வைகரியா தித்தறங்கள் மேலாம்
நாதமுடி வானவெலாம் பாசஞானம்`` *
``ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டேல்
சேவுயர் கொடியினான்றன் சேவடி சேர லாமே`` *
எனவும் ஓதியவாற்றான் அறிக. `கருக்கொள்ளுதல்` என்பது, உயிர்களைத் தனது வியாபகத்துள் அடக்கி நிற்றல், உயிர்களுக்கு உயிராய் அவற்றின் உள்நிற்றல் ஆகிய இரண்டினையும் குறித்து. `தலைவன்` என்பதன்பின் `தலைவனாய்` என ஆக்கச் சொல் வருவித்துரைக்க. ``ஈசன்`` எனப் பின்னர் வருதலால், முன்னர் வருவித்துரைக்க. ``ஈசன்`` எனப் பின்னர் வருதலால், முன்னர் வாளா, `தலைவனாய் இருக்கின்ற தன்மையை` என்றார். `கண்டேன்`, என்னாது, ``கண்டு கொண்டேன்`` என்றது நன்குணர்ந்தமை பற்றி.
இதனால், `ஞானம் ஒன்றே அஞ்ஞானத்தை நீக்குவது` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.