ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்

பதிகங்கள்

Photo

பச்சிம திக்கிலே வைச்சஆ சாரியன்
`நிச்சலும் என்னை நினை`என்ற அப்பொருள்
உச்சிக்குக் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதம்இது வாய்திற வாதே.

English Meaning:
Guru imparts the Secret Divine

To His west (right), He seated me
``Daily on me meditate`` — said He,
``That it is but the Truth that lies seated
Between the crown of the head and the palate of the mouth
This the Word True,
Cherish it as secret divine. ``
Tamil Meaning:
தான் வடக்கு நோக்கி அமர்ந்திருந்து, என்னைக் கிழக்கு நோக்கிச் சிவனை தியானித்து இருக்கும்படி பணித்த என் ஞானாசிரியர், பின்பு, `சிவன் உன் சிந்தனைக்கு அகப்படவில்லை யாகையால் நீ என்னையே சிவனாகத் தியானம்செய்` என்று அருளிச்செய்தார். அவர் அங்ஙனம் அருளிச்செய்த அந்தத் தியானம் எனது உச்சிக்குக் கீழும், உள்நாக்கிற்கும் மேலும் ஆகிய புருவ நடுவில் நிகழ்வது. அவ்விடத்து நிகழ்வதாகிய அந்தத் தியானமானது சொல் நிகழ்ச்சியோடு கூடாது, மனத்தொழில் மாத்திரையாய் நிற்பதாகும்.
Special Remark:
``பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியான்`` என்ற ஞானத்தை உணர்த்தும் முறை மரபினை எடுத்துக் கூறியவாறு, `வைச்ச இது பதம்` என மொழி மாற்றி யுரைக்க. இது பதம் - இந்த இடம். இஃது ஆகுபெயராய், இதன்கண் நிகழும் தியானத்தைக் குறித்தது. ``திறவாது`` என்பது, `திறக்கப் படாது` எனச் செயப்பாட்டு வினையாய் நின்றது. சொல் நிகழ்த்துதலை, `வாய் திறத்தல்` என்றது பான்மை வழக்கு.
மனத்தின் தொழில் சொல் நிகழ்ச்சியோடு கூடியும் நிகழும் ஆகலின் அவ்வாறு நிகழ்வது `தியானம்` எனப்படாது, - சொல் நிகழ்ச்சியின்றி நிகழ்வதே தியானமாம் - என்றற்கு ``வாய்திறாது`` என்றார். அசிந்திதனாகிய சிவனைச் சிந்திதனாகக் காண்பதற்கு உரிய குரு, லிங்கம், சங்கமம் என்னும் மூன்றனுள் குரு சிறந்து நிற்றல் இங்குப் பெறப்பட்டது.
இதனால், ஞானத்தைப் பெறு முறையும், பின் அதனை நிலை பெறுத்திக் கொள்ளும் முறையும் கூறப்பட்டன.