
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
பதிகங்கள்

பச்சிம திக்கிலே வைச்சஆ சாரியன்
`நிச்சலும் என்னை நினை`என்ற அப்பொருள்
உச்சிக்குக் கீழது உள்நாக்கு மேலது
வைச்ச பதம்இது வாய்திற வாதே.
English Meaning:
Guru imparts the Secret DivineTo His west (right), He seated me
``Daily on me meditate`` — said He,
``That it is but the Truth that lies seated
Between the crown of the head and the palate of the mouth
This the Word True,
Cherish it as secret divine. ``
Tamil Meaning:
தான் வடக்கு நோக்கி அமர்ந்திருந்து, என்னைக் கிழக்கு நோக்கிச் சிவனை தியானித்து இருக்கும்படி பணித்த என் ஞானாசிரியர், பின்பு, `சிவன் உன் சிந்தனைக்கு அகப்படவில்லை யாகையால் நீ என்னையே சிவனாகத் தியானம்செய்` என்று அருளிச்செய்தார். அவர் அங்ஙனம் அருளிச்செய்த அந்தத் தியானம் எனது உச்சிக்குக் கீழும், உள்நாக்கிற்கும் மேலும் ஆகிய புருவ நடுவில் நிகழ்வது. அவ்விடத்து நிகழ்வதாகிய அந்தத் தியானமானது சொல் நிகழ்ச்சியோடு கூடாது, மனத்தொழில் மாத்திரையாய் நிற்பதாகும்.Special Remark:
``பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியான்`` என்ற ஞானத்தை உணர்த்தும் முறை மரபினை எடுத்துக் கூறியவாறு, `வைச்ச இது பதம்` என மொழி மாற்றி யுரைக்க. இது பதம் - இந்த இடம். இஃது ஆகுபெயராய், இதன்கண் நிகழும் தியானத்தைக் குறித்தது. ``திறவாது`` என்பது, `திறக்கப் படாது` எனச் செயப்பாட்டு வினையாய் நின்றது. சொல் நிகழ்த்துதலை, `வாய் திறத்தல்` என்றது பான்மை வழக்கு.மனத்தின் தொழில் சொல் நிகழ்ச்சியோடு கூடியும் நிகழும் ஆகலின் அவ்வாறு நிகழ்வது `தியானம்` எனப்படாது, - சொல் நிகழ்ச்சியின்றி நிகழ்வதே தியானமாம் - என்றற்கு ``வாய்திறாது`` என்றார். அசிந்திதனாகிய சிவனைச் சிந்திதனாகக் காண்பதற்கு உரிய குரு, லிங்கம், சங்கமம் என்னும் மூன்றனுள் குரு சிறந்து நிற்றல் இங்குப் பெறப்பட்டது.
இதனால், ஞானத்தைப் பெறு முறையும், பின் அதனை நிலை பெறுத்திக் கொள்ளும் முறையும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage