ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்

பதிகங்கள்

Photo

நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயி ரென்ன உடன்நின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.

English Meaning:
Siva and Jiva are inseparable

There is approach none as I and You;
Like body and life inseparate are We;
Together are We like the heavens and the heavenly beings;
Like the honey and its sweentness that I do savour.
Tamil Meaning:
குருவருளால் ஞானத்தைப் பெற்ற சகல வருக்கத் தினர் பின்பு சிவன் ஆகாயம் போல வியாபகனாய் விளங்குதலை உணர்ந்து அதனால் சுட்டறிவை விட்டு எங்கும் வியாபகமாய் அவனை உணருமாற்றால் தேன் சுவையை நுகர்தல் போல அவனது தூய இன்பத்தை நுகருங்கால் அந்தச் சிவன் இவர்கட்குக் காட்சிப் படுதல், `நான் இன்பத்தைத் தருகின்றாய்` என இவ்வாறு வேறு நின்று நுகருமாறு அவன் இவரின் வேறாய் நிற்றல் அன்று. மற்று, இவர் உடம்பு போலவும், அவன் அவ்வுடம்பினுள் உள்ள உயிர் போலவும் உடனாய் நிற்கவேயாம்.
Special Remark:
``மனிதர்கள்`` என்பதை மூன்றாம் அடியின் முதலிற் சுட்டி, அது முதலாகத் தொடங்கி ``நண்ணுதல்`` என்பதன் முதற்கண் வைத்து உரைக்க. ``வானவர்`` என்றது சிவனை உயர்வுப் பன்மையாற் குறித்தவாறு. ``நின்று`` இரண்டில் பின்னது `நிற்றலால்` எனக் காரணப் பொருட்டாய் நின்றது. முன்னது அப்பொருளில் வந்த செயவென் எச்சத் திரிபு. `நண்ணுதல், நின்று` இவற்றிற்கும் வினைமுதல் பின்னர் வந்த ``வானவர்`` என்பதே. `திளைக்கின்ற வாற்றில்` என ஏழாவது விரிக்க.
``ஊன்`` என்றது. `உடம்பு` எனப் பொதுப்படவே அருளிச் செய்தாராயினும் அஃது அறிவுக்கருவிகளாகிய, உடம்பின் புறத்தில் உள்ள ஞானேந்திரியங்களையும், அகத்தில் உள்ள அந்தக் கரணங்களையுமே சுட்டி நின்றது. இவ் அறிவுக் கருவிகள் அறியுந் தன்மை யுடையனவாயினும் அவற்றோடு ஆன்மா இயைந்து தானும் அறிந்தாலன்றி அறியமாட்டாமை போல, உயிர்கள் அறிவுடையன வாயினும் சிவன் அவற்றோடு ஆன்மா இயைந்து தானும் அறிந்தா லன்றி அறியமாட்டாமை போல, உயிர்கள் அறிவடையனவாயினும் சிவன் அவற்றோடு உடனாய் நின்று அறிந்தாலன்றி அவை அறியமாட்டா. இந்நிலை பெத்தத்தில் மட்டுமின்றி முத்தியிலும் ஆதலை, ``ஊன் என, (வானவர்) ஊன் உயிர் என்ன உடன் நின்று`` என்றார். குருவருளை நினைப்பித்தற்கு மனித உயிரையே குறித்தார்.
இதனால், ஞானத்தின் முடிநிலைப் பயனாகிய பரமுத்தியின் இயல்பு கூறப்பட்டது.