ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்

பதிகங்கள்

Photo

குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடில்
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறிக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.

English Meaning:
Ghosts do not know the Truth of Life

This body, the Lord within,
The Prana that is breath,
And the Soul that dwells inside
The truth of all these
That to the perishable body pertains
They who know not,
Unto ghosts of the dead they are.
Tamil Meaning:
வினைக்கீடாகக் குறிக்கப்பட்ட உடம்பும், அவ் வுடம்பைத் தன்னுடையதாகக் கொள்ளும் உயிரும் ஒன்று சேர்ந்தவுடன், பிராணவாயுவும் நெறிப்பட்டு இயங்கத் தொடங்கும். (அங்ஙனம் இயங்குதல் உயிர் அவ்வுடம்பில் நிலைத்திருத்தற்குத் துணையாகவேயாம்) ஆகவே, அந்தப் பிராணவாயுவின் இயக்கத்தால் அந்த உடம்பில் நிலைபெற்றிருக்கின்ற அந்த உயிரிட மிருந்து அந்த உடம்பு ஒருகாலத்தில் பறிக்கவேபடும். அதனால், உயிர் உடம்பின் வேறாயினும், அஃது அதனைப்பற்றி நிற்றற்குரிய காரணத்தை உணர்ந்து அவ்வுணர்வால், தம்மை உடம்பின் வேறாக உணராது, உடம்பாகவே மயங்கி உலக வாழ்வில் இச்சை கொண்டு அலைபவர் பேயோடு ஒப்பர்.
Special Remark:
`இவாவுயிருக்கு இஞ்ஞான்று இவ்வுடம்பு உரியது` எனக்குறிப்பதும், இவ்வுடம்பில் பிராணவாயுவை இயங்கச் செய்த அதனால் அவ்வுயிரை அவ்வுடம்பில் சிலகாலம் நிலைப்பிப்பதும், பின்பு அவ்வுடம்பை அவ்வுயிரிடமிருந்து பறித்துவிடுவதும் எல்லாம் இறைவனது ஆணையேயாதலும், அந்த ஆணை அவ்வாறெல்லாம் செய்தற்குக் காரணம் உயிர்களின் வினையே ஆதலும் ஆகிய வற்றையே இங்கு ``நேர்மை`` என்றார். `நீர்மை` எனப்பாடம் கொள்ளுதலும் பொருந்தும்.
`பிராணன், நேர்மை` - என்பவற்றில், `ஆல்` உருபு விரித்துக் கொள்க. ``நேர்மையால்`` என்றது, `நேர்மையை உணருமாற்றால்` என்றபடி, பேய்க்கு வயிற்றுக்குத் தேடுதல் ஒன்றன்றிப் பிறிது குறிகோள் இல்லாமை பற்றி அத்தன்மையரைப் போயோடு ஒப்பிட்டார்.
இதனால், `ஞானம் பெறாதார் தம்மையும், தமக்கு உறுதியானவற்றையும் உணரமாட்டார்` என்பது கூறப்பட்டது.