ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்

பதிகங்கள்

Photo

உயிரும் சரீரமும் ஒண்பொரு ளான
வியலார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும்சிற் சத்திஆ திக்கே
உயலார் குருபரன் உய்யக்கொண் டானே.

English Meaning:
Guru works for Disciple`s Redemption

Life and body, and Prana breath that fleets after,
Siva the mighty and Chit Sakti that consorts
And Param the Truth Supreme
—All these to attain,
Gurupara my redemption worked.
Tamil Meaning:
சிவனை அடைய வேண்டினார்க்கு உடல் பொருள், ஆவிகளை அவனுடையனவாக ஒப்புவித்த பின்பும் மூச்சுக் காற்றினை இயக்கம் இடைவிடாது இயங்கியே நிற்கும் ஆதலின் அதுவும் அவர்கட்குச் சுமையாகும். அதனால், அதனையும் `ஆசிவன், ஆதிசத்தி` என்பவர்க்கு உரியன ஆகும்படி சிவகுரு நீர்வார்த்துக் கொடுக்கச் செய்து ஏற்றுக் கொள்வார்.
Special Remark:
``பரமும்`` என்னும் உம்மையை, ``பிராணன்`` என்பதன்பின் கூட்டி, ``பரம்`` என்பதை அதற்கும் கூட்டுக. வியல் - பரப்பு. அஃது இங்குப் பெரிதாதலைக் குறித்தது. பரம் - பாரம்; சுமை.
பிராரத்த வினை உள்ள வரையில் உடம்பு நீங்காது ஆகையால் உடம்பு நிற்றற்பொருட்டுப் பிராணவாயு இயங்கியே நிற்கும். அஃது இயங்கி உடம்பும் நிற்கவே, உடலோம்புதற் பொருட்டுச் சிறிதளவாயினும் உணவு தேடுதல், வெயில் பனி மழை முதலியவற்றால் வாட்டமும், மகிழ்ச்சியும் கொள்ளுதல் முதலியன நிகழும் ஆதலின் அவை ஆகாமியமாகி விடுதல் பற்றி, ``பின் பிராணனும் பரம்`` என்றார். `ஆயினும் மேற்கூறியன நிகழுங்கால் அவற்றைத் தம் செயலாகக் கொள்ளாது சிவன், சத்தி இவர்களது செயலாக உணரின் அவை ஆகாமியமாய் முடியா ஆதலின் அவற்றை அங்ஙனம் உணர்தற்பொருட்டு, குருமூர்த்திகள் நாள்தோறும் வழி பாட்டில் அவற்றையும் நீர்வார்த்துக் கொடுக்கச் செய்து ஏற்றுக் கொள்ளுதல் மரபு` என்றற்கு, ``உய்ய, உயல் ஆர் குருபரன் சிவன் சிற்சத்தி ஆதிக்கே கொண்டான்`` என்றார். ஆர் குருபரன் = ஆர்க்கின்ற - நிறைக்கின்ற குருபரன். `சிவகுரு` என்றற்கு, `குரு` என்று ஒழியாது, ``குருபரன்`` என்றார். சிவனும், சத்தியும் தொழில் செய்யாது வாளா இருக்குங்கால் `அனாதி` என்று சொல்லப்பட, ஐந்தொழில் செய்யுங் கால் `ஆதி` என்று சொல்லப்படுதல் பற்றி ``ஆதி`` என்பதன் பின், `ஆக` எந்பது வருவிக்க.
முன்னை மந்திரத்தில் சஞ்சிதத்தை ஒப்புவித்தல் கூறி, இம்மந்திரத்தில் ஆகாமியத்தை ஒப்புவித்தல் கூறினார்.
``தொல்லையின் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத் தழலுற அழிந்து போமே`` *
எனவும்,
``இடை ஏறும்வினை - தோன்றில் அருளே சுடும்`` l
எனவும் கூறுதல் காண்க.
ஞானம் பெறுமாற்றினைத் தாம் பெற்றவாற்றில் வைத்து விளக்கியவாறு.